Pages

Sunday, January 21, 2007

பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று


கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது. நாகப்பன் ஏரம்ப மூர்த்தி என்ற எருவில் மூர்த்தி அவர்கள் அரச எழுது வினைஞராகக் கடமையாற்றியவர். இவருக்கு சிவயோகம் என்ற மனைவியும் கயல்விழி என்ற மகளும் (தற்போது மணமுடித்து கனடாவில்) உள்ளனர்.

இவர் இலங்கை வானொலி தேசிய சேவை, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பிரபல பாடகர்களான வனஜா சிறீனிவாசன், சத்தியமூர்த்தி, சுஜாத்தா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, எஸ். இராமச்சந்திரன், வீ முத்தழகு, ஜோசப் இராஜேந்திரன், மற்றும் பல பாடகர்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார். மறைந்த எருவில் மூர்த்தியின் பாடல்களுக்கு திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.செல்வராஜா, ஆர்.முத்துசாமி, எம்.கே.ரொக்சாமி, யாழ்.கண்ணன் - நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர். ( தகவல் - வீரகேசரி ஜனவரி 14, 2007)

இந்தச் செய்தியைப் படித்ததும் என் நினைவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தாவியது. ஒரு வழக்கமான புதன்கிழமை மாலை " முற்றத்து மல்லிகை" என்ற ஈழத்துக் கலைப்படைப்புக்களைத் தாங்கிய நிகழ்ச்சியைச் செய்கின்றேன். அடுத்து ஒரு பாடல் "இயற்கை அன்னையின் கலைக்கூடம்" பாடலை இயற்றியவர் இணுவில் மூர்த்தி என்று என் ஊர் நினைப்பில் தவறுதலாகச் சொல்லிப் பாடலை ஒலிபரப்புகின்றேன். ஒரு நேயரின் தொலைபேசி அழைப்பு " அவர் இணுவில் மூர்த்தி இல்லை, எருவில் மூர்த்தி" என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே "முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா?" என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.

வணக்கம் எருவில் மூர்த்தி அவர்களே!
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் என்றும் எம் ஈழத்து நினைவுகளோடு இருக்கும் எம் உறவுகளுக்கு உங்களின் இலக்கியப் பணியின் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்.

நான் கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்பில் எருவில் என்ற கிராமத்தில் பிறந்தவன். அந்தக் கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 17 மைல்களுக்கு அப்பால் உள்ளது. 5 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தேன். பின்னர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி கற்கச் சென்றேன். அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது நான் அநேகமாகப் பத்திரிகைகளில் வரும் கதை, கவிதைகளைப் படிப்பது வழ்க்கம், அப்போது எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆரவம் தோன்றியது. சிறு சிறு பாடல்களையெல்லாம் எழுதினேன். ஆனால் அவையெல்லாம் சரியான பாடல்களா , இலக்கண முறைப்படி அமைந்தனவா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனபடியால் அவைகளை நான் பிரசுரிக்க அனுப்பவில்லை. நான் 8 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது வீரகேசரியின் சிறுவர்களுக்கான பகுதியில் பூஞ்சோலை என்ற கட்டுரையை எழுதியனுப்பினேன். அது உடனே பிரசுரிக்கப்பட்டது. அதன் பின்னர் நான் 16 , 17 வயதிலே கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டேன். நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் தமிழ் மீது நிறைய ஆர்வம் இருந்தது.


இலங்கை, இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் படிப்பதில் ஆர்வமுடையவனாக இருந்தேன். எனது 18 ஆவது வயதில் எழுதுவினைஞராக உத்தியோகம் கிடைத்தது, கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்தேன். பின் 19 ஆவது வயதில் மட்டக்களப்பிற்கு மாற்றலானேன். என் 20 வயதில் பயிற்சிக்காகக் கொழும்பு சென்றிருந்தபோது கவிஞர் மஹாகவி அவர்களைச் சந்திக்கும் பெரும்பேறு கிடைத்தது. அவர் அப்போது "தேன்மொழி" என்ற பெயரில் கவிதை நூலொன்றை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் நானும் ஒரு சந்தாதாரராகித் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். தேன்மொழியில் அழகான சிறப்பான கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்குச் சுவை கொண்ட கவித்துவம் நிறந்த கவிதைகள் அவை. முக்கியமாக நாவற்குழியூர் நடராசன், கவிஞர் மஹாகவி, சில்லையூர் செல்வராசன், மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த திமிலைத் துமிலன், நீலாவணன் என்று எல்லோரும் எழுதினார்கள். இவர்களுடைய கவிதைகளைப் படிக்கும்போது நானும் எழுதுவேன், பின்னர் கிழித்தெறிந்துவிடுவேன்.

அதன் பிறகு என் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் என் இரண்டு கண்களும் பறிபோயின. அதாவது 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் என்ற சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட்து. அதனை எதிர்த்து கொழும்பு காலிமுகத்திடலில் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையிலே ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. அதிலே பல அரசியல்வாதிகள் குறிப்பாக, வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், போன்றோர் கலந்துகொண்டார்கள். அவர்களையெல்லாம் காடையர்கள் தடிகளால் அடித்தும் கற்களால் எறிந்தும் பல அட்டகாசங்களைச் செய்தார்கள். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான அனர்த்தங்களும் ஏற்பட்டன.

இதன் காரணமாக இங்கே மட்டக்களப்பிற் கூட சத்தியாக்கிரகம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது எம்.பி ஆக இருந்த திரு ராசதுரை தலைமையில் இது நடைபெற்றது. மட்டக்களப்பில் கடையடைப்புக்கள் போன்றனவும் நிகழ்ந்தன. அதனால் இங்கு ஒரு சதித் திட்டம் உருவாகியது அதாவது தமிழர்களை எப்படியாவது பயமுறுத்தவேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகள், மற்றும் இங்கிருந்த சிங்கள முதலாளிகள் சேர்ந்து ஒரு அனர்த்தத்தை 1956 யூன் 8 ஆம் திகதி ஏற்படுத்தினார்கள். இரவு 10.30 மணியிருக்கும் கராஜ் ஒன்றிற்கு நெருப்பைக் கொழுத்திருப்பதைக் கண்டு இளைஞர்கள் நாங்கள் சேர்ந்து அந்த நெருப்பை அணைத்துக் கொண்டிருந்த போது சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். கராஜிற்கு எதிர்க்கடையில் வேலை பார்த்த தங்கராஜா, மற்றும் ராஜேந்திரன் (வயது 15) ஆகியோர் அங்கே கொல்லப்பட்டார்கள். 8 பேர் காயமடைந்தார்கள். 3 வயது பிள்ளை ஒன்றுக்கு சன்னம் பட்டு நல்லவேளையாகத் தப்பியது.
மற்றது நான், என் வலது கண்ணில் பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் இடது பக்கப் பின்புறமாக்ச் சென்று வலது கண்ணை முழுதாகச் சிதைத்துவிட்டது. இடது கண்ணையும் மூளையையும் தொடர்பு படுத்தும் பகுதி (Optic nerve) சிதைந்து விட்டது. எனக்கும் பார்வை போய் வேலையும் போய்விட்டது.

கொழும்புக்கு வைத்தியத்துக்காகக் கொண்டுசெல்லப்பட்டேன். அப்போதைய தொழிற்சங்கத்தலைவர் கே.சி.நித்தியானந்தம் அவர்களக் உதவி செய்தார். பின் கொழும்பிலிருந்து இந்தியா எக்மோர் hos pitalஇலும் வைத்தியம் பார்க்கப்பட்டது, பின்னர் இங்கிலாந்திலிருந்து திருகோணமலை வந்த கப்டன் Patric என்ற வைத்தியரையும் சந்தித்தேன். எதுவுமே செய்யமுடியவில்லை. எனது பார்வை நரம்புகள் செயலிழந்து பார்வை மீண்டும் கிடைக்காமல் போனது. ஆகவே நான் எனது குக்கிராமத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படியிருக்கும் போது பத்திரிகைகள், சஞ்சிகைகளை எனது சகோதரர்களும் நண்பர்களுமாக வாசித்துக் காட்டுவார்கள். அதன் மூலமாக எனக்கு இலக்கிய ஆர்வம் நிறையவே வளர்ந்து கொண்டு வந்தது. அப்பொழுது நான் பாடல்களைப் புனையத் தொடங்கினேன். முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே நா.ஏரம்ப மூர்த்தி என்ற பெயரிலேயெ சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தன் காதலிக்கு ஒரு வண்டைத் தூது விடுகிறேன் இப்படி:

போதவிழ்ந்த புது மலர்கள் தேடி நித்தம்
பித்தனைப் போல் சுற்றுகின்றாய் பேதை வண்டே
போடுகின்றேன் கேளுனக்கு நானோர் வார்த்தை
உத்தமியாள் என் சுசியைச் சென்று நீ பார்.
கோதையவள் கன்னமதில் ரோஜா காண்பாய்
குறு நகை செய் இதழ்களிலே முல்லை காண்பாய்
போதை பெறத் தேனெதற்குபோய்ப் பார்
எந்தன் பொற்கொடியாள் புன்னகையே போதுமென்பாய்.

சுதந்திரன் அப்பொழுது தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழரசுக்கட்சியில் கொள்கைகளயும் பாடல்களைவும் அப்பத்திரிகை வெளியிட்டு வந்தது. அந்தப் பத்திரிகையில் நிறையப் பாடல்களை எழுதினேன். அனேகமாக அவை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாடல்களாக அமைந்திருந்தன.

மெல்லிசைப்பாடல்களில் உங்கள் பங்களிப்புக் குறித்து?

72 ஆம் ஆண்டிலே மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டு வந்தன.நாவற்குழியூர் நடராசன் அவர்கள் இலங்கை வானொலியின் பணிப்பாளராக இருந்தபோது தான் மெல்லிசைப் பாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டு நானும் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கும் ஏற்பட்டது. நான் எழுதி அனுப்பிய இரண்டு பாடல்களுமே ஒலிபரப்பப்பட்டன. அப்பொழுது வானொலி நிகழ்ச்சி அமைப்பளராக் இருந்த இரா.பதமநாதன் (பின்னாள் தினக்குரல் ஆசிரியர்) "மூர்த்தி நீர் எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கின்றன " என்று அந்தப் பாடல்கள் ஒலிபரப்ப முன்னரேயே கடிதம் எழுதினார். வி,முத்தழகு பாடிய பாடல்கள் அவை.

தித்திக்கும் செந்தமிழில் சித்தம் கசிந்துருகி
நித்தமும் உனைப் பாடுவேன் - முருகா
இருளின் மத்தியில் உனைத்தேடினேன்.

என்று தொடங்கும் ஒரு பாடல்.

இந்தப் பாடல் ஒலிபரப்பாகி அடுத்த மாதத்தில் புலவர்மணி பெரியதம்பி அவர்கள் பஸ் நிலையத்தில் கண்டபோது சொன்னார். "தம்பி! உமது பாடல்கள் நன்றாக இருக்கின்றன, இன்னும் எழுதுங்கள் " என்று. அதன் பிறகு நிறைய மெல்லிசைப் பாடல்களை எழுதினேன்.

உங்களது இலக்கியப் படைப்புகள் எதாகினும் நூல் வடிவில் வந்திருக்கின்றனவா?

இல்லை, வரவில்லை.

உங்களது இலக்கிய ஆசானாக வரித்துக்கொண்டவர்?

அப்படி ஒருவரும் இருக்கவில்லை, ஆனால் மஹாகவி அவர்கள் மட்டக்களப்பில் O.A ஆக இருந்த போது அடிக்கடி சந்திப்பார். அவரை நான் முன்னோடியாக ஏற்றுக்கொண்டவன். அதாவது துரோணர் ஏகலைவன் போல.

ஒலிப்பதிவைக் கேட்க

எருவில் மூர்த்தியின் இரண்டு மெல்லிசைப் பாடல்களைத் தருகின்றேன், இதோ கேட்டு ரசியுங்கள்.

இயற்கையின் சிறப்பைக் கவிஞர் தன் கவி வரிகளில் இப்படித் தருகின்றார்.

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

இயற்கை இறைவனின்........

தாரகை சோலையில் வெண்ணிலவும் - ஒரு
தண்மலர்ச்சோலையில் பெண் நிலவும் (2)
பேரருள் கலைஞனின் கைத்திறமே - அவை
பேசவும் இனித்திடும் சித்திரமே..

இயற்கை இறைவனின்........

வான் என்னும் மேடையில் ஒரு பாதி - அவன்
வைத்தனன் பூமியில் அதன் மீதி
ஏன் என வாழ்ந்திட மனிதா நீ
அவன் செய்தவை யாவிலும் கலைவீடு

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

பாடலைப் பாடியவர்கள்: முல்லைச் சகோதரிகள்
இசை: ஆர்.முத்துசாமி

பாடலைக் கேட்க

மழலையைக் கண்ட கவிஞர் மனம் இப்படிப் பாடுகின்றது.

வட்டக்கருவிழி வண்டுகளோ
உந்தன் வண்ண உடல் மலர் செண்டுகளோ
பட்டு இதழ்களில் கட்டவிழ் புன்னகை
மொட்டவிழ் முல்லையோ..... புத்தொழியோ

வட்டக்கருவிழி.........

கொஞ்சும் மழலைகள் அஞ்சுகமோ
தேவன் கோயில் உமதில நெஞ்சகமோ
பிஞ்சு உடலின் மிஞ்சி வரும்
மணம் கஞ்சமென் மாமலர் தந்ததுவோ

வட்டக்கருவிழி..........

நெற்றி சுடரொளி வான் பிறையோ -எந்தன்
நெஞ்சில் நீ பெய்வதும் தேன் மழையோ
தத்தி நடந்து எனை கட்டியணைத்து - நீ
முத்தம் தரும் செயல் தான் கலையோ

பாடலைப் பாடியவர் அம்பிகா தாமோதரன்
இசை: எம். கே.ரொக்சாமி

பாடலைக் கேட்க

கவிஞர் எருவில் மூர்த்திக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
இப்பதிவு அவருக்குச் சமர்ப்பணமாகவும் அமைகின்றது.

26 comments:

  1. கானா பிரபா, உங்கள் இந்தப் பதிவுக்கு நன்றிகள். எருவில் மூர்த்தி அவர்களின் நேர்காணலையும் எழுத்து வடிவில் தந்தமை அன்னாருக்கு அஞ்சலியைப் பூரணப்படுத்தியது.

    அன்னாரின் மறைவு குறித்து தினக்குரலில் வந்திருந்த சிறு தகவலைக் கொண்டு விக்கிக் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளேன். தங்கள் பதிவின் மூலம் அன்னாரைப் பற்றி மேலும் பல தகவல்களை அவரின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிந்தது.

    50 வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டு கண் பார்வைகளை இழந்திருந்தும் இறுதிவரை பாடல்களும் கவிதைகளும் இயற்றி ஈழத்தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்திருக்கிறார் என்றால் அவரது பணியை மெச்சாமல் இருக்க முடியாது.

    அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. கவிஞர் எருவில் மூர்த்திக்கு
    என் அஞ்சலியும்
    அவர் குடும்பத்தினர்க்கு
    எனது ஆழ்ந்த் அனுதாபங்களும்.

    கலைஞர்கள், கவிஞர்களை
    அவர்கள் வழும் காலங்களில்
    அறிமுகம் செய்து வைத்தீர்களானால்
    அவர்களுக்கும் நேயர்களுக்கும்
    மிகவும் உதவியாக
    இருக்குமல்லவா!

    அன்புடன்,
    மெய் நாடி

    ReplyDelete
  3. பிரபா,
    எருவில் மூர்த்தி பற்றி இதுவரை அறிந்திடாத தவல்களைத் தந்துள்ளீர்கள்.

    //அதன் பிறகு என் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் என் இரண்டு கண்களும் பறிபோயின//

    படிப்பவர் மனதை இந்தக் கொடூரம் வலுவுடன் தாக்கும் வேளை அதை அனுபவித்தவரை எப்பாடு படுத்தியிருக்கும்?

    ReplyDelete
  4. பிரபா, ஒலிப்பதிவுக்கும் வலைப்பதிவுக்கும் நன்றி. அவரைப் பற்றிய அறிய உதவியது.

    ReplyDelete
  5. //குறு நகை செய் இதழ்களிலே முசை காண்பாய்//
    பிரபா!
    இந்த வரியில் "முசை" அல்ல "முல்லை" என்பதே பொருந்துமென நினைக்கிறேன். இவரைப் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். இப்படி இலை மறை காயாய் எத்தனை திறமைசாலிகள் தெரியாமலே போய்விட்டார்கள். மிக அழகான பாடல்கள்; இலகு தமிழில் .
    இவ்வறிமுகத்துக்கு மிக நன்றி.
    அன்னார் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. பிரபா!

    நான் கூட அறிந்திராத பல விடயங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். மிகநல்ல ஆவணப்பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. //Kanags said...

    அன்னாரின் மறைவு குறித்து தினக்குரலில் வந்திருந்த சிறு தகவலைக் கொண்டு விக்கிக் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளேன்.//

    வணக்கம் சிறீ அண்ணா

    தொடர்ந்து எம் ஈழத்தவர் பற்றிய குறிப்புக்களை விக்கியில் இணைக்கும் உங்கள் பணியும் மகத்தானது. முடிந்தால் என் பதிவில் உள்ள எருவில் மூர்த்தி அவர்களின் படத்தையும் விக்கியில் இணைக்கலாம் தானே.

    ReplyDelete
  8. //கலைஞர்கள், கவிஞர்களை
    அவர்கள் வழும் காலங்களில்
    அறிமுகம் செய்து வைத்தீர்களானால்
    அவர்களுக்கும் நேயர்களுக்கும்
    மிகவும் உதவியாக
    இருக்குமல்லவா!
    அன்புடன்,
    மெய் நாடி//

    வணக்கம் மெய் நாடி

    நீங்கள் சொல்லும் கருத்தோடு முழுமையாக உடன்படுகின்றேன். இயன்றவரை என் வானொலி நிகழ்ச்சிகளில் இக்கலைஞர்களைக் கெளரவித்தாலும் எழுத்துவடிவில் பிரசுரிக்கக் காலமும் நேரமும் இடங்கொடுக்கவில்லை.
    15 நிமிடப் பேட்டியையும் இரண்டு பாடல்களையும் எழுத்துருவில் மாற்ற எனக்குக் கிட்டத்தட்ட 4 மணி நேரம் பிடித்தது. என் தட்டச்சு வேகமின்மையும் ஒரு காரணம்.

    ஆனாலும் இயன்றவரை இவர்களைப் போன்ற கலைஞர்களை எதிர்காலத்தில் நானும் சக வலைப் பதிவர்களும் செய்யவேண்டும் என்ற ஆசை முன்னிறுத்தியிருக்கின்றது.

    ReplyDelete
  9. நன்றி பிரபா. புதிதாய் ஒருவரை இன்று அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  10. //பஹீமா ஜகான் said...
    //அதன் பிறகு என் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் என் இரண்டு கண்களும் பறிபோயின//

    படிப்பவர் மனதை இந்தக் கொடூரம் வலுவுடன் தாக்கும் வேளை அதை அனுபவித்தவரை எப்பாடு படுத்தியிருக்கும்? //

    உண்மைதான் பஹீமா ஜகான்

    நான் பேட்டி எடுக்கும் வரை எனக்கு இது தெரியாது, அவர் இதைச் சொல்லும் போது அப்போது கேட்டுக்கொண்டிருந்த எனக்குச் சுரீரென்றது. இடையிலேயே பார்வை போய் வேலையும் போவது எவ்வளவு கொடுமையான விஷயம், அதுவும் தன் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்திலே.


    இந்தப் பதிவு தான் நான் அவரின் நாட்டுப் பணிக்குச் செய்யும் கைமாறு.

    ReplyDelete
  11. பிரபா,
    பதிவுக்கு நன்றி.
    இப்போது வாசிக்க முடியவில்லை. பின்பு வாசிக்கிறேன்.

    ReplyDelete
  12. //-/பெயரிலி. said...
    பிரபா, ஒலிப்பதிவுக்கும் வலைப்பதிவுக்கும் நன்றி. அவரைப் பற்றிய அறிய உதவியது.//

    வருகைக்கு நன்றி பெயரிலி

    உங்களுக்கு இதில் இணைத்துள்ள மெல்லிசைப் பாடல்கள் முன்னர் கேட்ட அனுபவமும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. //Johan-Paris said...
    //குறு நகை செய் இதழ்களிலே முசை காண்பாய்//
    பிரபா!
    இந்த வரியில் "முசை" அல்ல "முல்லை" என்பதே பொருந்துமென நினைக்கிறேன்.//


    வணக்கம் யோகன் அண்ணா

    பாடலைக் கேட்டுக் கேட்டே எழுதினேன். நீங்கள் குறிப்பிட்ட சொல் பாடலில் தெளிவாக விளங்கவில்லை. தயவு செய்து யாராவது இந்த வரிகளைக் கேட்டு மீண்டும் உறுதிப்படுத்தினால் நல்லா இருக்கும்.

    //இவரைப் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.//

    உண்மை தான், இவர் போல பல கலைஞர்கள் தோன்றி தெரியாது மறிந்துவிட்டார்கள் :-(

    ReplyDelete
  14. //மலைநாடான் said...
    பிரபா!

    நான் கூட அறிந்திராத பல விடயங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். மிகநல்ல ஆவணப்பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.//

    வணக்கம் மலைநாடான்

    பலரும் இவரின் சிறப்பை அறியவேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த ஆவணப்படுத்தல் முயற்சி. வருகைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. //முடிந்தால் என் பதிவில் உள்ள எருவில் மூர்த்தி அவர்களின் படத்தையும் விக்கியில் இணைக்கலாம் தானே.//

    நன்றி!!

    ReplyDelete
  16. பிரபா.....எனக்கும் இவர் புதியவர் தான்... அறிய தந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  17. உருப்படியான ஒரு பதிவு. நல்ல அறிமுகம்...நன்றி !!!!!!!!

    ReplyDelete
  18. வணக்கம் டி.சே, வசந்தன், சின்னக்குட்டியர் மற்றும் ரவி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  19. நல்ல ஆக்கபூர்வமான பதிவு. நன்றி

    //உங்களது இலக்கியப் படைப்புகள் எதாகினும் நூல் வடிவில் வந்திருக்கின்றனவா?

    இல்லை, வரவில்லை.//

    கவலையான விடயம்.

    கவிஞர் எருவில் மூர்த்திக்கு
    என் அஞ்சலிகள்.

    ReplyDelete
  20. நல்ல படைப்பு...

    கவிதை புனைந்த கவிஞருக்கு
    எனது இரங்கல் செய்தி....

    கவி வடித்து
    கலை நெடித்து - பல
    செவி மடியச் செய்த
    புவியில் புதைந்த புதியோனே...

    உன் புகழ் மட்டும்
    தரணியிலே
    தவழ்ந்து வரும்
    தன்னாலே...

    ReplyDelete
  21. //U.P.Tharsan said...
    //உங்களது இலக்கியப் படைப்புகள் எதாகினும் நூல் வடிவில் வந்திருக்கின்றனவா?

    இல்லை, வரவில்லை.//

    கவலையான விடயம்.//

    உண்மைதான் தர்ஷன், நம் படைப்பாளிகள் பலரின் படைப்புக்களுக்கு நேர்ந்த கொடுமை இதுதான்.

    ReplyDelete
  22. //ஜி said...
    நல்ல படைப்பு...

    கவிதை புனைந்த கவிஞருக்கு
    எனது இரங்கல் செய்தி....//

    கவிபுனைந்த கவிஞருக்கு கவிமூலம் சிறப்பஞ்சலி சேர்த்துவிட்டீர்கள் நன்றிகள்.

    ReplyDelete
  23. hi brother,

    thaks a lot for your information about "ATUVIL MOORTHY" congratulation for your this best work. keep upp it.

    ReplyDelete
  24. hi prabanna,
    a lot of thanks for your information about "ATUVIL MOORTHTHY" and congratulation for your this usefull work. keep up it. bye.

    ReplyDelete
  25. வணக்கம் கிருஷ்ணா

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

    ReplyDelete