Pages

Friday, September 29, 2006

அந்த நவராத்திரி நாட்கள்

"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயலட்டை வீடுகளில் சின்னனுகள் கத்திக் கத்திப் பாடமாக்கும் சத்தம் கேட்பது தான் நவராத்திரி வருவதற்கான முன்னோட்டம். ஒவ்வொரு ஆண்டு நவராத்திரிக்கும் முன் சொன்ன அடிகள் மாறாது பேச்சுப் போட்டி மனப்பாடம் இருக்கும் . அந்த சின்னப்பிள்ளைப் பருவத்தில் சுவாமிப் படத்துக்குச் சகலகலாவல்லி மாலை பாடினால் அவல் சுண்டல், கெளபி கிடைக்கும் என்பது தான் நவரத்திரி பற்றித் தெரிந்த ஒரே இலக்கணம் எமக்கு. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களுக்கான பண்டிகை என்றாலும் "சரஸ்வதி பூசை" என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். ( இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)(இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி முருகன் கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)

ஒரு விஜயதசமி நாளில் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சோமாஸ்கந்தக் குருக்களிடம் என் அப்பாவும் அம்மாவும் அருச்சனை செய்து தம்பி வாத்தியார் என் கை விரலைப் பற்றிப் பரப்பியிருந்த நெற்குவியலைத் துழாவி ஆனா எழுத அடியெடுத்துக்கொடுத்தது சின்னதாக இன்னும் என் ஞாபகத்திரையில். ( குழப்படி செய்யாம ஆனா எழுதினா, கோவால் மாமா கடையில ஸ்ரார் ரொபி வாங்கித்தருவேன் - இது என் அம்மா). பின்னர் தம்பி வாத்தியார் தந்த அந்த ஆனா ஆவன்னா ஏட்டுச் சுவடி எமது சுவாமி அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அச்சு பதியாமல் ஆணியால் எழுதியது போல் அந்த எழுத்துக்கள் இருக்கின்றன.

பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும். (சிட்னி முருகன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் சிலை)

பள்ளிக்கூடங்கள் தொடங்கி ஊர்க் குறிச்சி வைரவர் கோயில் வரைக்கும் சரஸ்வதி பூசைக் காலத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்கள் அயல் வைரவர் கோயிலில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்றுப்பக்க வீடுகளுக்கும், வசதி குறைந்த குடும்பங்களை ஒன்றாக இணைத்து ஒருபூசையுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு நாளும் அவல், சுண்டல் கெளபி என்று விதவிதமான பண்டங்கள், சில குடும்பங்கள் தங்கள் பவிசை (வெளிநாட்டுக் காசு) நைவேத்தியத்தில் காட்டுவார்கள். அவர்களில் படையலில் மோதகத்துக்குள் கற்கண்டும் கடிபடும்.

கார்த்திகேசு அண்ணற்றை பெடிச்சியளும் , அங்கால சிவலிங்க மாமா, திருச்செல்வண்ணையின்ர பெடிச்சியளும் தான் வைரவர் கோயிலின் ஆஸ்தான சகலகலா வல்லி மாலைப் பாட்டுக்காறர். கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க "சகலகலா வல்லியே" என்று முந்திக்கொண்டே எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-)விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்). (சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் வீற்றிருக்கும் லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி விக்கிரகங்கள்(இடமிருந்து வலம்) )

சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். இணுவில் கந்தசுவாமி கோயில் முன் றோட்டில இருந்த வாணி கல்வி நிலையம் என்ற ரியூட்டறி நிர்வாகி பாலா ஒவ்வொரு வாணி விழாவிற்கும் அருணா கோஷ்டி மெல்லிசைக் குழுவைக் கொண்டு வருவார்.
" எட உங்கற்றா பாலசுப்பிறமணியம் போலப் பாடுறான்" என்று அவர்களை வாய்பிளக்கப் பார்த்த காலம் அது. பாலா வெளிநாடு போன கையோட வாணி கல்வி நிலையம் எவரெஸ்ட் என்று மாறவும் அருணா கோஷ்டிக்கும் ஆப்பு.
என்னதான் சொல்லுங்கோ, அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா சோக்கானது எண்டு தான் சொல்லவேணும். ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. "விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா" என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து "என்னடா உடுப்பிது" என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.

அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு
படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.

பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா " எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.

எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு "விதுரன் கதை" நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.
பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு " அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் " என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.

O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.

பள்ளிக்கூடங்களிப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இறுதியில் பெரிய வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு போட்டு விஜயதசமி நாளைக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் அரைச் சாறி (Half Saree)கட்டுவதும் இந்த நாட்களில் தான். ரவிச்சந்திரனுடன் எமது வகுப்புப் பூசைக்காக ஈச்சம் பத்தை தேடியலைந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு காலம்.

எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது. எமது பாடசாலையின் மூன்றாம் மாடி சரஸ்வதி பூசைக்கான இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாடிக்குப் போகும் இரண்டாம் மாடிப் படியோரமாக எமது வகுப்பு இருந்தது. காலையில் இரண்டுபாட ஆசிரியர்கள் லீவு. எம்மைத் தட்டிக்கேட்க ஆளில்லை. நானும் மஞ்சவனப்பதி கோயிலடி ராசனும் (இப்ப இவன் கனடாவிலையாம்) , வளர்மதி ரெக்ஸ்ரைல்ஸ் மதியாபரணத்தின்ர பெடியன் விக்கியும் ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(வயசுக்கோளாறு). வழக்கம் போல ராசனின் வாய் சும்மா இருக்காமல் ஒருத்தியைப் பார்த்துக் கிண்டல் அடித்ததும் அவள் பழிப்புக் காட்டிக்கொண்டே விறுவிறுவென்று மாடிப் படியில் ஏறவும், முதல் நால் மழைவெள்ளம் தேங்கிய படிக்கட்டில் வழுக்கி அவள் விழவும், வெள்ளை சட்டை காக்கிச் சட்டையாகத் தொப்பமானதும், விழுந்தடித்துக்கொண்டே வாங்கினை உள்ளே போட்டு எதுவும் தெரியாதது மாதிரி இருந்ததும் கூட மறக்கமுடியுமா? (இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது).

அதே ஆண்டு எங்கள் வகுப்பு லோகேந்திரன் ஆட்கள் நாடகம் போட்டார்கள். (சமூக நாடகமாம்) லோகேந்திரன் போட்ட பெண் வேடத்திற்கு எதிராக இதுவரை மானநஷ்டவழக்கு எதுவும் வரவில்லை. அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது. விஜயதசமி மேடையில் "தென்னக்கீற்றில் தென்றல் வந்து மோதும் " என்ற எழுச்சிப் பாடலை ராஜசேகரும் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து இறக்குமதி செய்த பெண்ணுமாகப் புன்முறுவலோடு பாடவும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கோகுலகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடல் முடியும் போது மேடையில் ஏறி ராஜசேகருக்கு மாலை போட்டதும் (செட்டப்போ தெரியேல்லை)
"இறங்குங்கடா மேடையை விட்டு" என்று உறுமியவாறே மகேந்திரன் மாஸ்டர் வந்ததும், அந்த விஜயதசமி நாட்களின் இறுதி அத்தியாயமாக அமைந்து விட்டது.

54 comments:

  1. நன்றாக பதிவு செய்துவிட்டீர்கள்....பொறுமையாக படித்து முடித்துவிட்டேன். ஆனால் பாண்ட் சிறியதாக உள்ளது. கொஞ்சம் பெருசாக்குங்க...

    அதே சமயம், நாம் பெங்களூரில் சந்தித்தபோது எடுத்த போட்டோவை எப்போ போடப்போறீங்க ?

    ReplyDelete
  2. சிவனுக்கு ஒரு ராத்திரி தேவிக்கு நவராத்திரி இல்லையா?

    ReplyDelete
  3. // செந்தழல் ரவி said...
    பாண்ட் சிறியதாக உள்ளது. கொஞ்சம் பெருசாக்குங்க...//



    வணக்கம் ரவி

    எழுத்துருவைப் பெரிதாக்கியிருக்கின்றேன். பெங்களூரில் நம்ம சந்திப்பு கேரளச் சுற்றுலா முடிந்ததும் பெங்களூர் வலத்தில் கட்டாயம் வரும்:-)

    ReplyDelete
  4. //ENNAR said...
    சிவனுக்கு ஒரு ராத்திரி தேவிக்கு நவராத்திரி இல்லையா? //

    வணக்கம் என்னார்

    சக்தி என்பது தேவிக்கும் பொருந்தும் தானே. எம்மூரில் தேவி என்பது புழக்கத்தில் சக்தி என்ற சொல்லை விட அதிகம் பாவிப்பதில்லை.

    ReplyDelete
  5. பிரபா, இந்தப் படங்கள் எப்பொழுது எடுக்கப்பட்டவை? குறிப்பாக சைக்கிள்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்ததும் அங்கு செல்ல வேண்டும்...குதிக்க வேண்டும்..மரங்களுக்கிடையில் வெதுவெதுக் காத்தோடு ஓடாட வேண்டும் என்று தோன்றுகிறது.

    அன்ன வாகனத்தில் கலைமகள்தானே? எந்தக் கோயில்? எந்த ஊர்?

    ReplyDelete
  6. வணக்கம் ராகவன்

    கருப்பு வெள்ளைப் படம் 80 களின் ஆரம்பப்படம்.

    மற்றைய கலர்ப் படங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்டது. அந்த சுவாமி வலம் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் தமிழ்வருடப்பிறப்பு உற்சவம்.

    ReplyDelete
  7. நீர் எழுத வெளிக்கிட்டா உப்பிடித்தான்.
    நல்ல அனுபவம் மீட்டல்.

    ReplyDelete
  8. எல்லா விஷயங்களையும் மனதில் நிறுத்தி எழுதியிருக்குறீர்கள்..
    எனக்கு நியாபகம் இருப்பதெல்லாம் எங்கள் வீட்டு கொலுவும்...இரண்டு நாட்களுக்கு புத்தங்களை சரஸ்வதியின் முன் வைத்துவிட்டு படிப்பதற்கு டிமிக்கி கொடுத்தததுதான்...

    மங்கை

    ReplyDelete
  9. எங்கட காலங்களிலை.. நவராத்தி நேரம் டியூட்டறி வழிய பட்டிமன்றம் நடக்கும் ...குமரன் மாஸ்டர் விசேசமாக பேசப்படுபவர்... ஒரு இடத்திலை இராமன் நல்லவனாய் காலையிலை நடக்கிற பட்டிமன்றதிலை பேசுவர்... அதே ஆள்..மாலையிலை இராவணன் நல்லவனாய் பேசுவர்.... உப்பிடியான அதிசயங்கள் நவராத்திரி காலங்களில் நடக்கும்

    ReplyDelete
  10. கானா பிரபா said...
    //வசந்தன்(Vasanthan) said...
    நீர் எழுத வெளிக்கிட்டா உப்பிடித்தான்.
    நல்ல அனுபவம் மீட்டல். //


    ஊக்கமான கருத்துக்கு நன்றிகள் வசந்தன்:-)

    ReplyDelete
  11. நல்லா அனுபவிச்சு இருக்கீங்க. எல்லாம் அப்படியே மனசுலெ வந்து போச்சா?
    அருமை.

    ஆமா ஒரு சந்தேகம். எப்பவும் தீனியில்தான் எனக்கு சந்தேகம் வரும்:-)

    //அவல் சுண்டல், கெளபி//

    அவல், சுண்டல் தெரியும்.
    அது என்ன கெளபி?

    ReplyDelete
  12. //மங்கை said...
    எல்லா விஷயங்களையும் மனதில் நிறுத்தி எழுதியிருக்குறீர்கள்..
    எனக்கு நியாபகம் இருப்பதெல்லாம் எங்கள் வீட்டு கொலுவும்...//

    வணக்கம் மங்கை

    ஈழத்தமிழர் வீடுகளில் அதிகம் கொலு வைக்கும் பழக்கமில்லை. நவதானியம் கலந்த கும்பமே வைக்கப்படும்.

    ReplyDelete
  13. //இரண்டு நாட்களுக்கு புத்தங்களை சரஸ்வதியின் முன் வைத்துவிட்டு படிப்பதற்கு டிமிக்கி கொடுத்தததுதான்..//

    ஹா...ஹா..:))

    //அவல், சுண்டல் தெரியும்.அது என்ன கெளபி?//
    70களின் பிற்பகுதியில் தான் இந்த கௌபி இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தெரிந்தவர்கள் இதைப்பற்றிச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  14. பிரபா,

    நல்ல மலரும் நினைவுகள் பதிவு, மண் வாசனையுடன்! ரொம்ப நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.

    //கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க முந்திக்கொண்டே சகலகலா வல்லியே என்று எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம்//

    சில சமயம் பாடுபவர் முடிக்கு முன்னரே, சிறுவர் குழாம் போட்டி போட்டுக் கொண்டு முடிக்கும். எல்லாம் பிரசாதத்துக்காக. பாடுபவரும் சுதாரித்து, ஓரிரு வரிகள் வெட்டி விடுவதும் வாடிக்கை :-)

    அது சரி, கருட சேவை பிரசாதம் வாங்கி விட்டீர்களா? இல்லையென்றால் இதோ:
    http://madhavipanthal.blogspot.com/2006/09/5_29.html

    ReplyDelete
  15. //சின்னக்குட்டி said...
    எங்கட காலங்களிலை.. நவராத்தி நேரம் டியூட்டறி வழிய பட்டிமன்றம் நடக்கும் ...குமரன் மாஸ்டர் விசேசமாக பேசப்படுபவர்... //


    கானா பிரபா said...
    வணக்கம் சின்னக்குட்டியர்

    கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா தொடங்கி வித விதமான பட்டிமன்றங்கள் அரங்கேறுவது இந்த நவராத்திரிக்காலத்தில் தானே :-)

    ReplyDelete
  16. //At September 30, 2006 12:41 PM, துளசி கோபால் சொன்னவர் இப்பிடி...
    நல்லா அனுபவிச்சு இருக்கீங்க. எல்லாம் அப்படியே மனசுலெ வந்து போச்சா?
    அருமை.//

    வணக்கம் துளசிம்மா

    தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். கெளபி என்பது ஒரு வகைக் கடலை வகை அவித்து உண்பது. கருப்புக் கலரில் இருக்கும்.

    வணக்கம் சிறீ அண்ணா

    உங்களைப் போன்றவர்கள் கெளபி பற்றி ஈனும் விரிவாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் :-)
    பார்ப்போம் யோகன் அண்ணா அல்லது சந்திரவதனா அக்கா விரிவான விளக்கத்தோடு வருகிறார்களோ என்று.

    ReplyDelete
  17. //, kannabiran, RAVI SHANKAR (KRS) சொன்னவர் இப்பிடி...
    பிரபா,

    சில சமயம் பாடுபவர் முடிக்கு முன்னரே, சிறுவர் குழாம் போட்டி போட்டுக் கொண்டு முடிக்கும். எல்லாம் பிரசாதத்துக்காக. பாடுபவரும் சுதாரித்து, ஓரிரு வரிகள் வெட்டி விடுவதும்
    வாடிக்கை :-)//

    சரியாகச் சொன்னீர்கள் கண்ணபிரான் ரவி சங்கர். தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
    தங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போலப் பிரமாதம் போங்கள்:-)

    ReplyDelete
  18. //கருப்புக் கலரில் //

    நீருமா?
    இந்தியாவில் கெளபியை எப்பிடிச் சொல்வார்கள்?

    கறுப்பு என்பதை விட மண்ணிறம் என்று சொல்லாமோ?
    அவரை விதையின் வடிவில் சிறிதாக இருக்கும்.

    ReplyDelete
  19. வன்னியன்

    சரி சரி கறுப்பு:-)

    ஆம், மண்ணிறம் என்பதே மிகப்பொருத்தமான கலர் கெளபிக்கு. இந்தியாவில் இதை எப்படி அழைக்கின்றார்களோ தெரியவில்லை. பார்ப்போம் யாராவது சொல்கின்றார்களோ என்று.

    ReplyDelete
  20. கானபிரபா உங்கள் நவராத்திரி மீட்டல்.... பள்ளி பருவ நாட்களை மீள நினைவூட்டியது.

    கௌபி என்பது பற்றிய விளக்கம், படங்கள்...

    இரண்டு/ மூன்று வகை

    1. பிறவுண் நிறத்தில்,
    2. பிறவுண்?? நிறத்தில் கறுப்பு புள்ளிகளுடன்
    3. வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற கண் போன்ற மைப்புடன்

    1. http://victoryseed.com/catalog/vegetable/peas/cowpea_whippor_small.jpg

    2. http://en.wikipedia.org/wiki/Cowpea

    ReplyDelete
  21. நல்லதோர் பதிவு.u have mentioned about Arudsellvam master .is that ira(இரா).arudsellvam(maths master,who draw circle with same radius in 1 attempt)??in my o/l time i took some class from him.
    A very kindly person .& Bala master aswell when he teach NALATHAMAYANTHI section, very interesting.i missed them on my a/l time anyway u remind me my autograph :D, by the way how r they??still teaching in SL??
    (SORRY!!!!2 type in english>>>font problem:d)

    ReplyDelete
  22. //kulakaddan said...
    கானபிரபா உங்கள் நவராத்திரி மீட்டல்.... பள்ளி பருவ நாட்களை மீள நினைவூட்டியது.//


    வணக்கம் குளக்காட்டான்

    தங்கள் வருகைக்கு என் நன்றிகள், குறிப்பாக ஆபத்பாந்தவராய் வந்து கெளபி பற்றித் தகவல் அளித்தமைக்கும் ஒரு விசேட பாராட்டு:-)

    ReplyDelete
  23. // கௌபி என்பது பற்றிய விளக்கம், படங்கள்...

    இரண்டு/ மூன்று வகை

    1. பிறவுண் நிறத்தில்,
    2. பிறவுண்?? நிறத்தில் கறுப்பு புள்ளிகளுடன்
    3. வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற கண் போன்ற மைப்புடன்

    1. http://victoryseed.com/catalog/vegetable/peas/cowpea_whippor_small.jpg

    2. http://en.wikipedia.org/wiki/Cowpea //

    இதுதான் கெளபியா? இதத் தமிழில்...குறிப்பாகத் தெற்கில் தட்டாம்பயறு என்பார்கள். இதை வேக வைத்துச் சுண்டலாகச் சாப்பிடுவார்கல். புளியூத்தி குழம்பு வைப்பார்கள். மிகவும் புரதம் நிறைந்த உணவு.

    // கானா பிரபா said...
    வணக்கம் ராகவன்

    கருப்பு வெள்ளைப் படம் 80 களின் ஆரம்பப்படம்.

    மற்றைய கலர்ப் படங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்டது. அந்த சுவாமி வலம் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் தமிழ்வருடப்பிறப்பு உற்சவம். //

    பிரபா...இலங்கைப் படங்களைப் பார்த்தாலே ஏதோ விட்ட குறை தொட்ட குறை நினைவுதான் எனக்கு. அங்கே போக வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்கனவே உண்டு. இந்தப் படங்கள் ஆசைத் தீயில் ஆவல் நெய்யைத்தான் ஊற்றுகின்றன. ம்ம்ம்ம்..சென்ற ஆண்டு முயற்சி செய்தேன். என்னுடைய மைத்துனன் ஒருவன் சிறுகாலம் கொழும்பில் இருந்தான். அப்பொழுது போயிருக்க வேண்டியதும்...ம்ம்ம் அவன் இப்பொழுது சென்னைக்கு வேறு வேலை தேடி வந்து விட்டான். வைகோ போனார்....பாரதிராஜா போனார்....மகேந்திரன் போனார் என்று படிக்கையில் பொறாமையாக இருக்கும். எனக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கந்தனை நம்பிக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  24. பிரபா!

    அதுதானே பார்த்தன். சும்மா படத்தைப்போட்டு, ரீல் விட்டிட்டீரோவென்டு. ஊரில நவராத்திரிக்கு எந்கோயில மயிலில சுவாமி வாறது? குதிரை வாகனத்திலதான் எல்லாச் சுவாமிகளும் வாழைவெட்டுக்கு வருவினம். இல்லையோ ?....

    என்டாலும் நீர் மேற்கு இணுவில் என்டதக் காட்டிப்போட்டீங்கள் பாத்திரே ?
    வாழைவெட்டுக்கு கிழக்கு இணுவில் சிவகாமி அம்மன் மேற்கு இணுவில் கந்தசாமி கோவிலில வந்து வாழ வெட்டிறதுதான் அந்தப்பகுதியில படு பிரசித்தம். மறைச்சுப் போட்டியளோ? அல்லது மறந்து போட்டியளோ?

    பாலா மாஸ்ரர் இங்க எனக்குக் கிட்டத்தான் இருக்கிறார். அடிக்கடி சந்திப்பம். முடிந்தால் இந்தப் பதிவைப் பிரதி எடுத்துக் குடுக்கிறன்.

    அதுசரி தம்பி வாத்தியாரட்டை ஆனா எழுதின ஆளா நீர். பிறகென்ன நல்ல ராசியான ஆளல்லோ அவர்.

    ReplyDelete
  25. ராகவன்!

    \\அங்கே போக வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்கனவே உண்டு. இந்தப் படங்கள் ஆசைத் தீயில் ஆவல் நெய்யைத்தான் ஊற்றுகின்றன. \\

    கவலை விடுக. விஜயதசமி எனும் வெற்றித்திருநாளில் சொல்கின்றேன். பாருங்கள், விரைவில் நீங்கள் எங்கள் ஈழமண்ணைத் தரிசிப்பீர்கள்

    ReplyDelete
  26. // kjey said...
    நல்லதோர் பதிவு.u have mentioned about Arudsellvam master .is that ira(இரா).arudsellvam//

    வணக்கம்kjey

    ஆமாம் அவர் இரா.அருட்செல்வம் மாஸ்ரர் தான். அவரும் பாலா மாஸ்டரும் நலமாகவே உள்ளார்கள். அவர்களைப் பற்றிய பதிவு கட்டாயம் போடுவேன் (படங்களுடன்). நளதமயந்தியை மறக்க முடியுமா:-) தமிழில் type செய்ய இந்த லிங்கை முயற்சி செய்து பாருங்கள்.

    http://www.jaffnalibrary.de/tools/Unicode.htm

    நீங்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டாலும் பரவாயில்லை. கருத்து அனுப்புவதே எனக்கு மகிழ்ச்சியான விஷயம்.

    ReplyDelete
  27. வணக்கம் ராகவன்

    உங்கள் ஈழப்பயணம் இனிதே கனியக் காலமும் ஆண்டவனும் கை கொடுக்கவேண்டும் என்று இறைஞ்சுகின்றேன். மலைநாடனே சொல்லிவிட்டாரே:-)

    வணக்கம் மலைநாடான்

    அந்த சுவாமி சுற்றும் படம், பதிவு கலர்புல்லாக இருக்கப் போடப்பட்டது, நன்றாகக் கவனித்து வாகனத்தையும் பார்த்துவிடுவீர்களே, படே ஆளுப்பா:-)

    வயசுக்கோளாறு நினைவுகள் முன் வந்து நின்றதால் கந்தசுவாமி கோயிலுக்கு வரும் அம்மனை மறந்துவிட்டேன். கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வாழை வெட்டு முடித்துத் தான் பிள்ளையாரடி போய் அடுத்த வாழைவெட்டுப் பார்ப்போம் நாம்.

    நீங்கள் சொன்ன பாலா மாஸ்டர் இன்னொருவர் என்று நினைக்கிறேன். ஏனெனில் எமக்குப் படிப்பித்தவரைக் கடந்த ஏப்ரலில் தாயகத்தில் நான் சந்தித்தேன்.

    ReplyDelete
  28. பிரபா, உங்களின் சாயல்களோடு நிறைய நவராத்திரி நினைவுகள் எனக்குமுண்டு. என்ன... க.பொ.த(உயர்) படிக்காததும் அந்தப்பொழுதுகளில் பெண்களின் பின்னால் அலையாத நினைவுகளைத் தவிர மிச்சம் எல்லாம் எனக்கும் பொதுவானவை.
    ....
    மகேந்திரன் மாஸ்ரர் (கொக்குவில் இந்து அதிபராயிருந்தவர் தானே? பிறகு யாழ் இந்துக்கு அதிபரானாவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்) நல்லதொரு ஆளுமையான அதிபர். அவருக்காகவே கொக்குவில் இந்துவில் படிக்காலாமோ என்று கூட நினைத்தது ஒரு காலம்.

    ReplyDelete
  29. கானா பிரபா, நல்ல பதிவு. மிக ஆவலாய் திட்டமிட்டு கதிர்காமர் அவர்களின் மரணத்தால் அரை நாளாய் சுறுங்கிப் போனது எங்கள் பயணம். கைகெட்டியும் வாய்க்கு எட்டவில்லை கதைதான். ஆனால் ஒரு நாள்
    அங்கும் அமைதி ஏற்படும். இலங்கை முழுதும் சுற்றி வருவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  30. //டிசே தமிழன் said...
    க.பொ.த(உயர்) படிக்காததும் அந்தப்பொழுதுகளில் பெண்களின் பின்னால் அலையாத நினைவுகளைத் தவிர மிச்சம் எல்லாம் எனக்கும் பொதுவானவை.//

    வணக்கம் டி சே
    நீங்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான்:-)

    //மகேந்திரன் மாஸ்ரர் (கொக்குவில் இந்து அதிபராயிருந்தவர் தானே?//

    ஆமாம் அதே மகேந்திரன் மாஸ்டர் தான். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவரைப் பற்றி நிறையச் சொல்கின்றேன்.

    ReplyDelete
  31. அருமையான பதிவு பிரபா. ஒரு நவராத்திரி நாளில் தான் நாம் வடமராச்சி மக்கள் இந்திய வெறி இராணுவத்தால் எமது மண்ணை விட்டு துரத்தி அடிக்கப்பட்டோம் அந்த நிகழ்வு தான் ஒவ்வொரு நவராத்திரி தினத்திலுல் எனக்கு நினைவுக்கு வரும். உங்கள் பதிவு என்னுடைய பாடசாலை நாட்களுக்கு இட்டு சென்றுள்ளது.

    மில்லர்

    ReplyDelete
  32. //வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு எதிர்வருபவர்களின் நெற்றியில் பூசிவிட்ட படி இருந்தார். பக்கத்தில் ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார் யார் என்று பார்த்தால் சின்னக்குட்டி. நட்சத்திர வாரம் கொண்டாடி கொஞ்சம் ஆள் பூரிப்பில் இருந்தார்.//


    hehehe

    ReplyDelete
  33. பிரபா!
    இந்தச் சரசுவதி பூசை எனப் பொதுவாகக் கூறும் நவராத்திரி; அகில இலங்கையிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் விழா; இவ்விழாவைச் சந்திக்காது,; ஒரு இந்து மாணவன் வரமுடியாது." வெண்டாமரைக்கன்றி நின் பதம் தாங்க என் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்கு"- சகல கலாவல்லி மாலை பாடாத வாயுமிருக்குமா???
    அப்படியே பழசெல்லாம் நினைவுக்கு வந்தது.
    நல்ல தொரு பக்திக்கலாச்சாரப் பதிவு.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  34. பிரபா அண்ணா,
    உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்...
    ரியூசனில் நடக்கும் போட்டிப் பரீட்சைகளும், பட்டி மன்றங்களும், பாட்டு நிகள்வுகளும், நினைத்துப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது.

    அப்போதெல்லாம், எனக்கு மிகவும் வெட்கம், பாடுவதற்கோ, ஆடுவதற்கோ எதிலுமே பங்குபற்றுவது கிடையாது... யாராவது எனது நண்பர்கள் என்னைக் காட்டாயப் படுத்தி பாடுவதற்கு பெயர் போட்டால் நான் அன்றைக்கு ரியூசனுக்கோ, பாடசாலைக்கோ போகாமல் விட்டு விடுவேன். இப்போது நினைக்கும் பொழுது நான் நிறைய miss பண்ணி விட்டேனோ என்று நினைக்கத் தோன்றும்...

    உங்களின் பதிவுகள் மூலம் இறந்த காலத்தினை, நிகழ்வினில் நினைவூட்டியதற்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
  35. //ramachandranusha said...
    கானா பிரபா, நல்ல பதிவு. இலங்கை முழுதும் சுற்றி வருவேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்//


    வணக்கம் உஷா

    தங்கள் வருகைக்கு என் நன்றிகள், தங்கள் எதிர்பார்ப்பும் கைகூடவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  36. //மில்லர் said...
    உங்கள் பதிவு என்னுடைய பாடசாலை நாட்களுக்கு இட்டு சென்றுள்ளது.//

    வணக்கம் மில்லர்

    தங்கள் வருகைக்கு என் நன்றிகள், அதுபோல் எமது ஈழத்தவர் ஒருவரை வலைப்பூமூலம் கண்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் அனுபவப் படையல்களையும் எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  37. Anonymous said...
    //வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு எதிர்வருபவர்களின் நெற்றியில் பூசிவிட்ட படி இருந்தார். பக்கத்தில் ஒருவர் குதிரையில் வந்து இறங்கினார் யார் என்று பார்த்தால் சின்னக்குட்டி. நட்சத்திர வாரம் கொண்டாடி கொஞ்சம் ஆள் பூரிப்பில் இருந்தார்.//


    வணக்கம் அநாமோதய நண்(பி)பரே

    எங்கே இந்தத் பதிவுத் துண்டு கிடைத்தது. முழுதாக வாசிக்கச் சித்தமாக இருக்கின்றேன்:-))

    ReplyDelete
  38. // Johan-Paris said...

    அப்படியே பழசெல்லாம் நினைவுக்கு வந்தது.
    நல்ல தொரு பக்திக்கலாச்சாரப் பதிவு.
    யோகன் பாரிஸ்//

    வணக்கம் யோகன் அண்ணா

    தங்கள் வருகைக்கும் தொடர்ந்தும் என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்துவதற்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  39. அநோமதய நண்பரே..

    எங்கயப்பா இந்த பதிவு இருக்கு பார்ப்பம் ..லிங் குடுங்கப்பா......சின்னக்கு்ட்டியை குதிரையிலை எல்லாம் ஏத்தி அழகு பார்க்கிற மகராசாக்கள்...நல்லாயிருக்கோணும்

    பிரபா ...மன்னிக்கோணும் ... இந்த பதிவிலை நான் தேவை இல்லாமல் அரட்டை அடிக்கிறதுக்கு...

    ReplyDelete
  40. //Haran said...
    பிரபா அண்ணா,
    உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்... //

    வணக்கம் ஹரன்

    வாசித்துக் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  41. //வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க வாசலுக்கு போனால், பொட்"டீ"க்கடை, குழலி உள்ளிட்ட கீழை மார்க்சீய ச்சை தூரக்கிழக்கு நண்பர்கள் விமானநிலையத்திலிருந்து வந்திறங்கினார்கள். கானா பிரபா, பேஃன்ட் போட்டிருந்தாலும் கையில் ஒரு சிறுபையில் திருநீறு வைத்துக்கொண்டு//

    வரவனையான்

    ReplyDelete
  42. கானா பிரபா
    நீங்கள் இணுவிலா... அப்படியானால் அங்எ விஞ்ஞானம் படிப்பித்த சர்வேஸ்வரன் மாஸ்டரை தெரியுமா... நான் அவரிடம் ஓராண்டு படித்தேன். அவரும் சரஸ்வதி பூஜையை அருமையாக கொண்டாடுவார். 94ல் ஒரு மாணவியர் பாடி நடித்த "சமையலுக்கு ஏத்த வதி எண்ட பிள்ளை சரசுவதி" என்ற இசை நாடகம் இன்னும் மனதோரம் கேட்கிறது

    ReplyDelete
  43. வணக்கம் கானா பிரபா அவ்விணைப்பை உங்கள் பகுதியில் இட்டது நான் தான். நேரமின்மை காரணமாய் அனானியாய் இணைக்க வேண்டியதாய் போய்விட்டது. மன்னிக்கவும் அதன் லிங்க் கிழே உள்ளது .

    http://kuttapusky.blogspot.com/2006/09/behind-screen.html

    ReplyDelete
  44. வணக்கம் சின்னக்குட்டியர்,

    நீங்கள் பின்னூட்டம் போட்டுப் பதிவு பற்றிக் கேட்டு விசாரித்தது குறித்து ஒரு குறையும் இல்லை:-)
    இப்ப ஆள் ஆராரெண்டு கண்டு பிடிச்சாச்சு.

    வணக்கம் சிறீ அண்ணா

    வரவனையனின் பதிவுத் தொடுப்பைத் தந்தமைக்கு என் நன்றிகள்.

    வணக்கம் வரவனையன்

    கடந்த 2 நாட்களாய் உங்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருக்கிறேன். பார்வையாளராக.... இப்போது போட்டீங்களே ஒரு போடு:-))))

    ReplyDelete
  45. //அருண்மொழி said...
    கானா பிரபா
    நீங்கள் இணுவிலா... அப்படியானால் அங்எ விஞ்ஞானம் படிப்பித்த சர்வேஸ்வரன் மாஸ்டரை தெரியுமா... //


    வணக்கம் அருண்மொழி

    நான் இணுவில் தான், சர்வேஸ்வரன் மாஸ்டர் சைவப்பிரகாச வித்யாசாலையில் அல்லவா படிப்பித்திருந்தார்? அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

    ReplyDelete
  46. ம்ம் இணுவிலாருக்கு கோயில் குளத்தைப் பற்றிய அனுபவமும் விரதகால அனுபவமும் இல்லாவிட்டால்தான் சந்தேகப்படவேண்டும்.உந்த நவராத்திரி சிவராத்திரி அனுபவத்தைச் சொல்லி மாளாது ஆளாளுக்கு ஊர் போற ஆசையைக் கிளப்பி வேடிக்கை பார்க்காதையுங்கோ சின்னக்குட்டியர் வேறை 751 பஸ் பற்றி எழுதி ஒருக்கா போயிட்டு வந்திடுவமோ எண்டு நினைக்க வைச்சிட்டார்.

    ReplyDelete
  47. வணக்கம் ஈழநாதன்

    இன்பமான அந்தப் பொழுதுகளைத் தொலைத்துவிட்டு அந்த நினைவுகளோடு மட்டும் தானே வழ எம்மால் முடிகின்றது.

    //இணுவிலாருக்கு கோயில் குளத்தைப் பற்றிய அனுபவமும் விரதகால அனுபவமும் இல்லாவிட்டால்தான் சந்தேகப்படவேண்டும்.//

    :-)))

    ReplyDelete
  48. அன்புடன் பிரபா,
    இரு தினங்களுக்கு முன்பிருந்து தான் உங்கள் பதிவுகளைப் பார்த்து வருகிறேன்.
    மிக நன்றாக உள்ளது.
    பயணங்கள் உங்களுக்குப் பெரிய அனுபவங்களைத் தந்துள்ளன.அவற்றைப் பதிவு செய்துள்ளவிதம் அருமை.

    ReplyDelete
  49. ஃபஹீமாஜஹான்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  50. வணக்கம் பிரபு அண்ணை,
    உங்கட இந்த பதிவை வாசிக்கேக்கை என்னக்கும் பழசெல்லாம் ஞாபகம் வருது...
    (எல்லாற்ற பேரோடையும்.....)
    --பிரசாந்த்

    ReplyDelete
  51. வணக்கம் பிரசாந்த்

    இந்த புளொக் பதிவுகள் மூலம் தொலைத்த உங்களைப் போல எம் ஊரில் இருந்தவர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதை வார்த்தைகளால் சொல்லமுடியாது.

    ReplyDelete
  52. பிரபா
    நல்ல படங்களுடன்
    நல்லதோர் நினைவுமீட்டல் பதிவு.என் அனுபத்தை எழுதும்போது எங்கும் படங்களைத் தேடியும் கிடைக்கேலை.

    கெளப்பியை நான் எழுத மறந்திட்டன். அதைக் குதிரைக் கொள்ளு எண்டும் சொல்லுவினம்.
    அங்கை கூட்டிக் கொண்டு போயிட்டீங்கள், நன்றி:-)

    ReplyDelete
  53. வாங்கோ செல்லியக்கா

    இதில் இருக்கும் படம் எனது சொந்தத் தொகுப்பு. எத்தனையோ நினைவுகளை மீட்கும் இந்த நவராத்திரி.

    ReplyDelete
  54. உறவு முறைகளும் அழைக்கும் விதமும் நிறையவே பரவசமூட்டுகின்றன..! அப்பப்போ இந்த மாதிரி லிங்க் ஞ்பாகபடுத்துங்கள்.. நீண்ட நெடுங்காலத்திற்கு பின் எனது கமெண்ட்ஸ் வருது.. இல்லையா. ! மகிழ்ச்சி..

    ReplyDelete