Pages

Tuesday, July 04, 2006

ரச தந்திரம் - திரைப்பார்வை

ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் (தயாரிப்பாளர்கள் கவனிக்க), நல்ல தியேட்டர் கொண்டு போகிறேன் என்றவாறே சாந்தி தியேட்டர் என்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்". ரச தந்திரம் என்றால் இரசாயனம் (வேதியியல்) என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.படத்தின் கதைக் கரு இதுதான். தச்சுச் தொழிலாளியாக வேலை பார்ப்பவன் பிறேமச்சந்திரன் (மோகன்லால்) , கூடவே தன் தந்தையை மட்டுமே குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இவன் தன் தச்சுத் தொழிலாள நண்பர்களுடன் ஒருவீட்டின் திருத்தவேலைகள் செய்யும் போது அவ்வீட்டுக்காரர்களால் கொடுமைப்படுத்தப் படும் கண்மணி (மீரா ஜாஸ்மின்) என்ற வேலைக்காரி மீது அனுதாபப்படுகின்றான். கண்மணி சேலத்தைச் சேர்ந்த தமிழ்பெண் என்றும், அநாதையாகிப் போன அவள் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவே இப்படிக் கஷ்டப்படுகின்றாள் என்பதையும் தெரிந்துகொண்ட பிறேமச்சந்திரன் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி இன்னோர் இடத்தில் வேலைக்கமர்த்த முயற்சி செய்கின்றான். இதற்கிடையில் அந்தக் குடும்பத்தாரின் தொடர் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்யமுயற்சி செய்கிறாள் கண்மணி. இதைக் கண்ட பிறேமச்சந்திரன் அவளைக் காப்பாற்றி தற்காலிகமாக ஒரு இடத்தில் மறைத்து வைக்கின்றான். அவளும் விடலைப் பையன் போல மாறுவேடம் பூண்டு நடிக்கிறாள். இதற்குள் கண்மணியைக் காணவில்லை என்று வீட்டார் கொடுக்கும் புகார் , தொடர்ந்த குழப்பங்களால் கண்மணி, தான் பிறேமச்சந்திரன் மேல் கொண்ட காதலால் தான் ஓடி வந்ததாகக் கூறுகிறாள். பின்னர் அவன் மேல் உண்மையான அபிமானமும் அவளுக்கு ஏற்படுகின்றது. ஆனால் கண்மணியின் காதலை ஏற்கமறுத்து விலகி விலகிப் போகும் பிறேமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தான் ஒரு ஜெயில் தண்டனைக் கைதி என்ற உண்மையைச் சொல்லும் போது படம் இன்னொரு திசையில் பயணப்படுகின்றது.
முழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.

படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.
மோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.

படம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம்.
அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.

நம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் " நிமிர்ந்த நன்னடையும்" என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.

80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.
இப்படப்பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/malayalam/movie/M0000961.html



தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.

இப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற "நிழல் கூத்து" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

இப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.
மூலப்பதிவு என் சகவலைப்பூவான உலாத்தல் இல் www.ulaathal.blogspot.comதமிழ்மண நட்சத்திரவாரத்துக்காகச் சமகாலத்தில் மீள்பதிவிடப்படுகிறது.

35 comments:

  1. பிரபா...அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டீர்...

    விமரிசனம் சூப்பர்....

    ReplyDelete
  2. ///
    நம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று.
    ///

    விமர்சனம் நன்றாக இருந்தாலும் உள் குத்தாக எம் தானைத் தலைவரை குத்தி இருப்பததால் இந்த நட்சத்திர வாரம் முழுவதும் உங்களுக்கு கண்டண பின்னூட்டங்களை வெளியிடப் போகிறேன்.

    :-))))))

    ReplyDelete
  3. வணக்கம் ரவி

    உங்கள் பாணியில் கருத்தைத் தெரிவித்தமைக்கு நன்றிகள்:-))

    ReplyDelete
  4. // குமரன் எண்ணம் said... விமர்சனம் நன்றாக இருந்தாலும் உள் குத்தாக எம் தானைத் தலைவரை குத்தி இருப்பததால் இந்த நட்சத்திர வாரம் முழுவதும் உங்களுக்கு கண்டண பின்னூட்டங்களை வெளியிடப் போகிறேன். //

    சரி, சரி விடுங்க தல,
    இதையெல்லாம் கண்டுக்காதீங்க
    பொழச்சுப் போயிர்றேன்:-))

    ReplyDelete
  5. பிரபா,
    உலாத்தலில் வந்த இதே பதிவில் கடைசியாக நானிட்ட பின்னூட்டம் வரவில்லை. நிறுத்தப்பட்டுள்ளதா?

    ReplyDelete
  6. நிறுத்தவில்லை ஜோ

    இப்போது தான் பிந்திக்கிடைத்த இடுகைகளைப் போட்டிருக்கின்றேன், இப்போது பாருங்கள், உங்களின் ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. அதையா குறிப்பிட்டீர்கள்

    ReplyDelete
  7. // உங்களின் ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. அதையா குறிப்பிட்டீர்கள்//
    ஆமாம்..அவசரகுடுக்கையாகி விட்டேன் .மன்னிக்கவும்!

    ReplyDelete
  8. பரவாயில்லை ஜோ:-)

    ReplyDelete
  9. பிரபா!
    இங்கே மலையாளப்படப் பிரதி வாடகைக்குக் கூட எடுப்பது சிரமம்; மோகன்லால் என் அபிமான நடிகரில் ஒருவர்; இப்படம் பார்க்க முயர்ச்சிக்கிறேன். இவ்வளவு அழகான பொண்ணை வேலைக்கு வைத்து கொண்டு கொடுமை செய்ய சினிமாவிலதான் முடியும்.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  10. இவ்வளவு அழகான பொண்ணை வேலைக்கு வைத்து கொண்டு கொடுமை செய்ய சினிமாவிலதான் முடியும்.
    யோகன் பாரிஸ்

    :-)))

    நல்ல வரும்போது பிரதி அனுப்புகிறேன் அண்ணா

    ReplyDelete
  11. விமர்சனம் அருமையாக இருக்கிறது. கட்டாயம் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

    //நம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில்//

    ம்.. துணிந்து பல உணண்மைகளை கூறியிருக்கிறீர்கள் :-)))

    ReplyDelete
  12. வணக்கம் தர்சன்

    கட்டாயம் இந்தப் படத்தைப் பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  13. நல்ல அலசல் கானா பிரபா.

    //தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும்//
    இப்பவெல்லாம் தமிழ் திரையலகம் மலையாளக் கரையில் தான் கதை தேர்வு செய்யறாங்க. Hollywood ன்னா Royalty தர வேண்டியதில்லை இங்க தெரிந்தா கோர்ட் கேஸ்ன்னு போயிடறாங்கப்பா.


    தமிழ்நாட்டில் ஆட்டோகாரர்கிட்ட நல்ல மலையாள படம் ஓடுற Theaterக்கு கூட்டிக்கிட்டு போக சொல்லாதிங்க. :-)) இங்க அதுக்கு பொருளே வேற. ;)

    ReplyDelete
  14. //குறும்பன் said...

    இப்பவெல்லாம் தமிழ் திரையலகம் மலையாளக் கரையில் தான் கதை தேர்வு செய்யறாங்க. Hollywood ன்னா Royalty தர வேண்டியதில்லை இங்க தெரிந்தா கோர்ட் கேஸ்ன்னு போயிடறாங்கப்பா.//

    அதுவும் சரிதான், ஆனால், சந்திரமுகியின் மூலக்கதையான மணிச்சித்ரதாழ் கதாசிரியர் மதுமுட்டத்துக்கு அல்வா தான் கெடச்சுதாமே?

    //தமிழ்நாட்டில் ஆட்டோகாரர்கிட்ட நல்ல மலையாள படம் ஓடுற Theaterக்கு கூட்டிக்கிட்டு போக சொல்லாதிங்க. :-)) இங்க அதுக்கு பொருளே வேற. ;) //

    அய்யா....சாமி... நீங்க நெசமாலுமே குறும்பன் தானுங்கோ:-))

    ReplyDelete
  15. பிரபா,

    இது எந்தா? உன்னி கிருஷ்ணன் மரிச்சோ? தெய்வமே.... சுகக்கேடு இல்லே? எத்தர நல்ல நடன். ஹூம்ம்....

    ReplyDelete
  16. ஆமாம் துளசிம்மா

    ரச தந்திரம் படப்பிடிப்பு காலத்தில் இவருக்கு சிறுநீரகக் கோளாறு வந்ததாம். ஆஸ்பத்திரிக்கும் படப்பிடிப்புக்குமாக நிறைய அலைச்சலாம். பொறுமையோடு மோகன்லால் போன்ற பெரிய நடிகர்கள் இதைப் புரிந்துகொண்டு நாள் அதிகம் எடுத்து நடித்தார்கள் என்று, ஆலப்புழாவில் நான் இருக்கும் போது ஆங்கிலப் பத்திரிகையில் இயக்குனர் சத்தியன் அந்திக்காடு சொல்லியிருந்தார்.

    ReplyDelete
  17. ரொம்ப நன்றி துளசிம்மா

    ReplyDelete
  18. ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றி சில படைப்பாளிகள் சொன்னார்கள் இப்படி
    "His demise is certainly an irreparable loss to the entire film industry here. His acting in my film 'Nizhalkuthu' as an executioner was simply superb. He was a great actor,"
    - Adoor Gopalakrishnan


    "There is no need to say that he was a great actor. He was one who portrayed all the characters with a lot of subtlety. He will certainly be missed by all,"
    - Bharath Mohanlal

    Sathyan Anthikkad, director of Achuvinte Amma said Oduvil was "the height of flexibility" in the art of acting. "You won't find such a flexible actor. That is why I called him for Achuvinte Amma, even when he was in failing health."
    ?
    "Unniyeattan was one of the best human being I have ever come across. In his death we have lost a good brother and good actor,"
    - PV Gangadharan.

    Filmmaker KG George remembered Oduvil as one of the rare actors who handled any character with real ease.

    "Oduvil was a perfect actor in Malayalam movies, where good actors are very rare,"
    - Veteran actor Thilakan, who remembered Oduvil from the old days of dramas.

    ReplyDelete
  19. பிரபா அணுஅணுவாக ரசித்துருக்கிறீர்கள் உங்கள் விடுமுறையை என
    நினைக்கிறேன். இந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணனின் நடிப்பை பல படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன் மிக அற்புதமான நடிகர் (கோபால கிருஷ்னின் (the man of the story) award movie toronto film festival நம்மாக்களுக்கு
    மளயாள படமென்னறால் ரொம்ப அலர்ச்சி ஒரு தமிழரும் வரவில்லை
    படம் முடிந்து வெளியே வந்தேன் அடுர்கோபாலகிருஷ்னன் சாதாரன
    ஒரு சாதாரன ஆள் போல் சுவர் ஓரமாக நின்றுருந்தார் அப்படியே நலம்
    விசாரித்து அழைத்து சென்று உணவாத்தில் இருவரும் உணவருந்திக்கொண்டேன் இந்த ஒடுவில்உன்னிகிருஷ்னை பற்றி
    வினவினேன் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் இவர் பழகரொம்ப
    இனிமையானவர் நடிப்பில ரொம்ப அற்புதமானவர் என்று குறிப்பிடார்
    அடுர்கோபாலகிருஷ்னன். ஒடுவிலின் மறைவுமிகவும் வேதனையானாது
    மற்றையது மோகன்லால் எந்த கதாபத்திரமானலும் வெளுத்து வாங்கும்
    அற்புதமான நடிகர் கிலுக்காம் தசாரதம் உன்னிகளே ஒரு கதபறயாம்
    பெயர் மறந்து போன எத்தனையோ இவரின் படங்கள். இன்றும் ரசிக்கவைப்பவை (வைப்பவர்)

    செல்வா
    TORONTO

    ReplyDelete
  20. வணக்கம் செல்வா

    உங்கள் பதில் கண்டு மகிழ்கின்றேன். என்னைப் போல் இன்னொருவர், நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் ரசனைகளை அவ்வப்போது தாருங்கள்.

    ReplyDelete
  21. நல்லப் பதிவு ,வீடியோ வரும் வரைக் காத்துருக்க வேண்டியது தான் ..

    ஒடுவில் மலையாளப் படங்களில் குணச்சித்திர வேடங்களும் ,சிலப் படங்களில் காமடியும் செய்திருக்கிறார்..
    நிழல்க் குத்து இன்னமும் பார்க்கவில்லை..கண்டிப்பாக நன்றாகப் பண்ணியிருப்பார்..

    ReplyDelete
  22. வணக்கம் கூத்தாடி

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  23. prabha try to write leading tamil magazines. good keep it up

    ReplyDelete
  24. மணியன் தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். பிரபலப் பத்திரைகைகளுக்கு எழுதச் சொல்லும் உங்கள் வேண்டுகோள் குறித்து மகிழ்கின்றேன். அந்தத் தகுதியை ஏற்படுத்தி கொடுத்த உங்களைப் போன்ற அன்பு வாசகர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  25. i mean it prabha, u r accomplishing exactly what u feel. that's good. thamizhargal sidhari kidakkum badharasa thuligal, adhil neengalum oruvar. mallu kuttigal nam padangalai thazhvaga pesum thathbariyangal nadandhu kondu irukkum velaiyil thangalin vimarsanam varaverkka thakkadhu. kadavulukku veliyum thaliyum kattum ulagil eluthhalargalum vasagarkalum thalli nindru nadu nilayil iruppadhu arokyamana vishayam. ur writting is hvng a style without ur knowledge.
    KEEP IT UP.

    ReplyDelete
  26. மேற்கண்ட மணியனின் பின்னுட்டத்தைத் தமிழ்ப்படுத்தியிருக்கின்றேன்.

    தமிழர்கள் சிதறிக் கிடக்கும் பாதரசத் துளிகள், அதில் நீங்களும் ஒருவர். மல்லு குட்டிகள் நம் படங்களை தவறாகப் பேசும் தாற்பரியங்கள் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் தங்களின் விமர்சனம் வரவேற்க்க தக்கது. கடவுளுக்கு வேலியும் தாலியும் கட்டும் உலகில் எழுத்தாளர்களும் வாசகர்களும் தள்ளி நின்று நடு நிலையில் இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

    வணக்கம் மணியன்
    தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  27. வணக்கம் சங்கர்குமார்

    தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். நிச்சயமாக, சென்னை வரும் போது நானும் உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  28. கானாபிரபு, உங்கள் விமரிசனம் திரைப்படம், பார்த்த சூழல் என நாங்களே உங்களுடன் படம் பார்த்த உணர்வைக் கொடுத்தது.என்ன, முடிவைத்தான் மறைத்து விட்டீர்கள். இருந்தாலும் யூகிக்க முடியாதா என்ன ?
    ஒடுவில் உன்னிகிருஷ்ணனை பல மலையாளப் படங்களில் பார்த்து அவரது versatalityஐ வியந்திருக்கிறேன். இன்றுதான் அவர் பெயர் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அவரின் மறைவு வருத்தமளிக்கிறது. உங்கள் அஞ்சலியில் நானும் கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  29. வணக்கம் மணியன்

    படம் பார்த்த உணர்வை என் திரைப்பார்வை கொடுத்ததுகண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    ஒடுவிலில் மறைவு, மலையாள சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே இழப்பு.

    ReplyDelete
  30. வணக்கம் தல..இன்னிக்கு தான் பார்த்தேன்.

    அருமையான படம்...நீங்கள் சொன்னாது போல கேரளாவில் ராஜாவின் ராஜங்கம் தான் ;-)

    உங்கள் விமர்சனமும் அருமை...ஓளிப்பதிவைவும் இந்த படத்தில் அருமையாக இருக்கும்.

    \தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை\\


    சூப்பரா சொன்னிங்க.. ;-)

    ReplyDelete
  31. வணக்கம் கோபி

    ஒரு வருஷம் கழிச்சு இந்த விமர்சனத்தை வாசிச்சுக் கருத்து தந்தமைக்கு நன்றி ;-)

    நான் சொன்னது தமிழ் இயக்குனர்கள் காதில் விழுந்ததோ தெரியலை, இப்போ நிறைய தமிழ்ப்படங்கள் மலையாளப்படங்களைத் தழுவி வருகின்றன.

    லாலோட்டனின் "சோட்டா மும்பை" சமீபத்திய நல்ல படமாம். இனிமேல் தான் பார்க்கணும்.

    ReplyDelete
  32. அருமையான விமர்சனம் தலை...
    இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல வார்த்தை இல்லை...
    //தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு//
    இதை நான் ஒத்துக்க மாட்டேன் தலை. படக் கதையின் அடிநாதமே அப்பா-மகன் உறவுதான்...அதன் மேல் பின்னியதுதான் மற்ற கதைகள்...
    முதல் பாடலைக் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே... எனக்குப் பிடித்தது...
    மத்தபடி இந்தப் படம் பார்க்கக் காரணமே ராஜாதான் என்பதால் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை...

    ReplyDelete
  33. வாங்க நண்பா

    இந்தப் படத்தைப் பார்த்தபோது உடன் தோன்றிய உணர்வுகளை எழுதியிருந்தேன். அப்புறமா டிவிடி வாங்கிப் பார்த்தபோது நீங்கள் சொன்னது போல அந்த தந்தை மகன் உறவின் புனிதத்தை என்னாலும் உணர முடிந்தது, மிக்க நன்றி

    முதல் பாடல் அருமையான சிந்து அல்லவா

    ReplyDelete
  34. இந்த படத்தை மிகவும் அனுபவித்து பார்த்திருக்கிறேன். மூன்று முறை பார்த்துவிட்டேன். உங்கள் விமர்சனம் மிகவும் கச்சிதம். மோகன்லாலின் தந்தையாக வரும் கோபியைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். இசையை பற்றி சொல்லவேண்டியதே இல்லை.

    ReplyDelete
  35. வணக்கம் மஞ்சூர் ராஜா,

    கோபி அவர்களை இந்தப் படத்தில் பார்த்த நேரம் அவரின் முந்திய ஆளுமைகளை அறிந்திருக்கவில்லை. பிறகு தான் அவரின் பல படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. இந்தப் படத்தை மீண்டும் டிவிடியில் பார்த்தபோது அவரின் நடிப்பை நுணுக்கமாகப் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete