Pages

Sunday, July 09, 2006

அடைக்கலம்

இந்த நட்சத்திர வாரத்தில் இவரைப் பற்றி எப்படியாவது சொல்லவேண்டும் என்று நான் விரும்பிய எழுத்தாளர், சுதாராஜ். ஈழத்து எழுத்தாளரான இவர் மல்லிகை சஞ்சிகையினால் கண்டெடுத்துத் தந்த நல்ல சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாட்டில் வேலை செய்யும் போது அந்த நாட்டில் இந்தியர்களும் சரி ஈழத்தவர்களும் சரி, சந்திக்கும் அனுபவங்கள், வேதனைகளைத் தன் பேனா மையால் நிரப்பியவர்.

1987 ஆம் ஆண்டில் இந்திய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடத்துவாசல் பிள்ளையாரடியில் இருந்த காலத்தில் இவரின் "இளமைக் கோலங்கள்" என்ற நாவல் தான் இவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்தியது. இவர் எழுத்தில் இருந்த வித்தியாசமான நடை, தொடர்ந்தும் என்னைச் செங்கை ஆழியான் தாண்டி சுதாராஜ்ஜின் எழுத்துக்களையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டது.

வித்தியாசமான களங்களைத் தன் சிறுகதைகளுக்குத் தேர்ந்தெடுப்பது, அல்லது ஒரே களத்தில் வித்தியாசமான கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பது, இவரின் பலங்களில் ஒன்று. இவரின் ஒரு சிறுகதையை வாசித்து முடித்தால் கிடைக்கும் திருப்தி, அகோர வெயிலில் சைக்கிளில் யாழ்ப்பாணம் ரவுண் வந்து லிங்கம் கூல்பாரில் பலூடா சர்பத் குடித்த திருப்திக்கு ஒப்பானது. எளிமையான நடையும், மனித உணர்வுகளைத் தன் எழுத்தில் கொண்டுவரும் பாங்கும் சுதாராஜ்ஜின் தனித்துவங்களில் ஒன்று.

கொடுத்தல், மற்றும் தெரியாத பக்கங்கள் போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகள், சுதாராஜ்ஜின் எழுத்தின் பல பரிமாணக்களைக் காட்டும். இவரின் நான்கு புத்தகங்கள் தொடர்பான விபரம்
விருபா என்ற தளத்தில் உள்ளன. சுதாராஜ் பற்றிய மேலதிக விபரங்களை என் இந்தப் பதிவின் பின்னூட்டமாக விருபா அளித்திருக்கின்றார்.

1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது.அப்போது நான் ஈழத்தில் இருந்தேன். யாழ்.பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து ஆனந்தவிகடனை வாங்கி, தீராத ஆவலால் இணுவிலிற்குச் சென்று வாசிக்கவிரும்பாமல், ஒரு ஒரமாகச் சைக்கிளை நகர்த்தி , சைக்கிள் பாரில் இருந்தபடியே நான் வாசித்துத் தீர்த்த சிறுகதை இது. ஆனந்த விகடனால் "ஒரு மெளனத்தின் அலறல்" என்ற தொகுப்பிலும் இடம்பிடித்தது இந்தச் சிறுகதை.

இன்றைய பதிவில் நான் இவரின் கொடுத்தல் என்ற சிறுகதையை PDF வடிவில் இணைத்திருக்கின்றேன். சற்றே பெரிய சிறுகதை என்பதால் எழுத்தில் ஏற்றுவதில் சிரமம் இருந்தது. சிரமத்துக்கு மன்னிக்கவும். பிரதியை அச்செடுத்து வாசித்துப் பாருங்கள்.
இங்கே சுட்டவும்: அடைக்கலம்

இந்தச் சிறுகதையைக் கடந்தவாரம் நான் தேடியலைந்ததை இப்போது நினைக்கும் போது சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது. கொடுத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பை நான் வைத்திருந்தேன் அதிலும் இந்தச் சிறுகதை இருந்தது.ஆனால் இரவல் வாங்கிய நண்பர் தொலைத்துவிட்டார். நான் இருக்கும் உள்ளூர் நூலகத்தில் தேடிப்பார்த்தேன், வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களைக் கேட்டேன், இணையத்தில் நூலகம் தளத்தில் தேடினேன். என் பழைய மல்லிகை இதழ்களைப் புரட்டிப்பார்த்தேன். கடைசியாக ஞாபகம் வந்தது எழுத்தாள நணபர் ஒருவர். அவரிடம் சுதாராஜின் சிறுகதைத் தொகுப்பு இருப்பதாகவும் தேடிப்பார்ப்பதாகவும் சொன்னர். அன்றொரு நாள் மாலை இந்த அடைக்கலம் சிறுகதையைத் தொகுப்பில் கண்டெடுத்துவிட்டதாகச் சொல்லித் தொலை நகலில் அனுப்பிவைத்தார்.

இவ்வளவு சிரமமெடுத்து இந்தச் சிறுகதையை நான் அரங்கேற்ற விழைந்தது, எனக்குக் கிடைத்த இந்த நல் வாசிப்பு அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு காரணம், மற்றயது நான் இந்த நட்சத்திர வாரத்தில் இறுதியாகத் தரப்போகும் பதிவு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட கதைகரு இது. அந்தப் பதிவை இன்னும் சில மணி நேரத்தில் அரங்கேற்றுகின்றேன். அதுவரை இந்தச் சிறுகதையை வாசித்துவிட்டுக் காத்திருங்கள்.

தற்போது இலங்கை, புத்தளத்தில் வாழ்ந்துவரும் சுதாராஜ், இந்த அடைக்கலம் சிறுகதையின் கருவே மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பயன்பட்டது என்ற குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றார். இந்தப் படம் வருவதற்கு முன்னர் புத்தளம் வந்து மணிரத்னம் தன்னைச் சந்தித்தபோது லொகேசன் பார்க்கவே வந்ததாகக் கூறிச் சில உதவிகளைப் பெற்றபோதும் தன்னிடம் இச்சிறுகதையைப் படமாக்கும் அனுமதியைப் பெறவில்லை என்றும் சொல்கின்றார்.

21 comments:

  1. sutharaj oru architect; kattubetta graduate. aananthavikatan kathai oru kuruvikku adaikkalam koduththa kathai. athai ezuthiyapoothu avar middle eastil irunthaar

    ReplyDelete
  2. //Anonymous said...

    சுதாராஜ் ஒரு architect; kattubetta graduate. ஆனந்தவிகடன் கதை ஒரு குருவிக்கு அடைக்கலம் கொடுத்த கதை. அதை எழுதியபோது அவர் middle eastஇல் இருந்தார்//

    வணக்கம் அநாமோதய நண்பரே
    நீங்கள் சொல்வது சரி, தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. சுதாராஜ் அவர்கள் எழுதிய மற்றைய புத்தகங்கள்

    ReplyDelete
  4. வணக்கம் விருபா
    பொருத்தமான இடத்தில் தகுந்த தகவல்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. After a long time, read a thought-provoking Tamil short story:-).

    Of course, my Tamil reading is limited to blogs and Ananda Vikatan, unfortunately:-)

    Waiting for your blog now...

    -Kajan

    ReplyDelete
  6. நான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்படி செய்ய வைக்கிறது.

    நன்றி.

    புதிய புரிதலுடன்
    பச்சோந்தி

    ReplyDelete
  7. //Anonymous said...
    After a long time, read a thought-provoking Tamil short story:-).
    -Kajan //

    வணக்கம் கஜன்
    நீங்கள் குறிப்பிட்டவாறு நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் சிறுகதை வாசிப்புக்குத் தீனி போட்டது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே:-)

    ReplyDelete
  8. //Chameleon - பச்சோந்தி said...
    நான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. உங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப் பார்க்கும்படி செய்ய வைக்கிறது.

    புதிய புரிதலுடன்
    பச்சோந்தி //


    வணக்கம் பச்சோந்தி
    தங்கள் எண்ணவோட்டத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  9. நீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா?

    ReplyDelete
  10. கானா பிரபா said...
    //theevu said...
    நீங்களும் லிங்கம் கூல்பார் சர்பத் சுவைஞனா? //

    வணக்கம் தீவு
    யாழ்ப்பாணத்தில இருந்துபோட்டு லிங்கம் கூல்பாரை ரசிக்காமல் விட்டால் எப்படி?
    ஏ.எல் காலத்தில் வார இறுதி நாட்களில் லிங்கம் கூல்பாரே கதி.

    ReplyDelete
  11. தரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. //Kanags said...
    தரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அருமையான கதை. படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றிகள். //


    என் வாசிப்பு அனுபவத்தை இப்போது நீங்கள் பெற்றிருப்பீற்கள் சிறீ அண்ணா:-)

    சுதாராஜ் பற்றி மேலும் ஒரு தகவல் உங்களுக்காக, இவரின் சகோதரர் குணசிங்கம் architect; ஆக சிட்னியில் இருக்கிறார். அவர் ஒரு நாடகக் கலைஞரும் கூட. இப்போது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. "அடைக்கலம்" படித்தேன்
    உங்கள் உதவியோடு .........

    முதல் நன்றி!

    "ஈழத்தின் நல்ல சிறுகதைகளை
    தேடிப்படி உனது பயணத்துக்கு தீனி போடும்" என்பார்கள் என் இனிய நண்பர்கள் பிரபா - வசந்தி (பிரான்ஸ்).

    சில வேளைகளில் சிலவற்றில் என்னால் ஒன்றிக்க முடியவில்லை. ஏனோ தெரியாது?

    அடைக்கலம் என் நெஞ்சைத் தொட்டது.
    அவர்களது பரிவு - பாசம் - எதிர்பார்ப்பு..........
    நகல் எடுத்தது நட்டமில்லை!

    சுதாராஜ் வாழும் புத்தளம் நகரில் சிலகாலம் வாழ்ந்தவன்.
    கதை என் நினைவுகளையும் மீட்டிச் சென்றது.
    அவர் வாழும் அதே வீதியில் உள்ள சென்.அன்றூஸ் காலேஜில் (சிங்களம்) சில காலம் கற்றதால்
    உங்கள் சைக்கிள் சவாரியும் என்னோடு சேர்ந்தே சவாரி செய்தது.......

    மலரும் நினைவுகளை மீட்டிய பிரபாவுக்கு நன்றி!

    ReplyDelete
  14. வணக்கம் அஜீவன்

    தங்களுக்கு என்னால் முடிந்த சிறுகதை அனுபவப் பகிர்வைப் பகிர்ந்ததையிட்டும், உங்களின் நினைவு மீட்டலும் கண்டு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    சைக்கிள் சவாரி தரும் சுகத்தைச் சொகுசு காரும் தருமா?

    ReplyDelete
  15. நன்றிகள்....பிரபா... ... சுதராஜ் என்ற எழுத்தாளார் பற்றிய அறிமுகத்துக்கு..... இவரை ஏனோ தெரியாது அறிந்திருக்கவில்லை... இவர் 80 களின் நடுப்பகுதிக்கு பின்னரா எழுத தொடங்கியவர்......?

    ReplyDelete
  16. வணக்கம் சின்னகுட்டியர்
    சுதாராஜ் மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்த்துக்கொண்டே மல்லிகையில் எழுதியவர். இவரின் பல கதைகள் எனக்கு மல்லிகை மூலமாகவே அறிமுகம். சிலவேளை நான் நினைப்பதுண்டு, சுதாராஜ் டொமினிக் ஜீவாவின் எழுத்துலக வாரிசோ என்று அவ்வளவுக்கு மல்லிகையில் தனக்கென இடம்பிடித்தவர். இவர் 80 களின் நடுப்பகுதிக்குப் பின்னரே எழுத்துலகில் அறிமுகமானவர்.

    ReplyDelete
  17. பிரபா,

    இன்றுதான் நேரம் கிடைத்து உமது பதிவிற்கு இரண்டாம் முறை வருவதற்கு.

    ஒரு உறுதியான மறுப்பு முதலில் - விருபா தளம் புத்தக விற்பனையில் ஈடுபடுவதில்லை. எமது தளத்தில் முதல் பக்கத்தில் அறிவித்தல் பகுதியிலும், கையேட்டிலும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.


    இரண்டாவது சுதாராஜ் அவர்களைப் பற்றிய தகவல்.

    சுதாராஜ் வடமராச்சியைச் சேர்ந்த சிவசாமி-இராசம்மா தம்பதிகளின் இரண்டாவது மகன், இயற்பெயர் இராஜசிங்கம்.

    1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர்.

    முதல் சிறுகதைத் தொகுப்பு "பலாத்காரம்" சிரித்திரன் வெளியீடாக வெளிவந்தது.

    "கொடுத்தல்" இற்காக சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றவர்

    புத்தளத்தில் புத்கக் கடையையும் தேனுகா என்ற பெயரில் பதிப்பகமும் வைத்திருக்கிறார், இவரது தேனுகா பதிப்பகம் மூலம் 15 இற்கும் மேலான புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார்.

    2002 முதல் தன்னை வளர்த்த "சிரித்திரன்" ஐ கௌரவிப்பதற்காக "சிரித்திரன் சுந்தர் விருது" இனை, ஈழத்துப் படைப்பாளிகளால் பிரசுரிக்கப்படும் சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகிறார்.


    மேற்கண்ட தகவல்கள் 2006 ஜூன் மல்லிகையில் மேமன்கவி அவர்கள் எழுதிய, "எழுதி, எழுதியே இயங்கும் பொறியியலாளர் சுதாராஜ்" இல் உள்ளன

    ReplyDelete
  18. வணக்கம் விருபா

    தங்கள் விரிவான மடலுக்கும், மேலதிக தகவல்களுக்கும் என் நன்றிகள். அன்றைய தினம் தாங்கள் அனுப்பிய சுதாராஜ்ஜின் புத்தக விபரம் சம்பந்தமான ஐப் பார்ந்தபோது, 4 புத்தகங்கள் விற்பனையில் உள்ளன என்பதைப் பார்த்து, விருபா ஒரு இணைய மூல புத்தக விற்பனை சேவை என்று நினைத்துப் பதிவிலும் போட்டுவிட்டேன். இன்று தான் உங்களின் விரிவான பணிகளைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. தவறுக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன். பதிவிலும் திருத்தம் செய்திருக்கின்றேன்.

    தங்கள் மடலுக்கு மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
  19. பிரபா, தெரியாத பக்கங்கள் சிறுகதைத்தொகுப்பினை (மல்லிகைப்பந்தல் வெளியீடு) இன்று எமது உள்ளூர் அரசினர் வாசிகசாலையில் இருந்து எடுத்துவந்தேன். 11 சிறுகதைகளையும் அழகாக எழுதியிருக்கிறார் சுதாராஜ்.
    அவரைப் பற்றிய குறிப்பினை விக்கியில் சேர்த்துள்ளேன். பாருங்கள். விருபாவுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  20. வணக்கம் சிறீ அண்ணா
    கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. விக்கியிலும் எங்கள் படைப்பாளியைப் பற்றிய நல்லதொரு தகவற்களஞ்சியத்தைக் கொடுத்திருக்கின்றீர்கள். நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  21. From சுதாராஜ்: எல்லோருக்கும் மிக்க நன்றி. நீண்ட காலத்திற்குப் பின்னர் இன்னொருமுறை பிரபாவின் கட்டுரையையும் ஏனையவர்களின் கருத்துக்களையும் வாசித்தேன். மகிழ்ச்சியாயுள்ளது. எனது 60 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று (உயிர்க்கசிவு) 2010 ல் சென்னை என். சி.பி.எச். வெளியிட்டது. கானா பிரபாவுக்கு அது கிடைத்திருக்குமென நினைக்கிறேன்.

    ReplyDelete