Pages

Friday, July 07, 2006

பிஞ்சுமனம் - குறும்படப்பார்வை


நேற்று "பிஞ்சு மனம்" என்ற மனதை நெகிழ வைக்கும் குறும்படத்தை நான் பார்க்க நேர்ந்தது. இதனை எனக்கு அறிமுகப்படுத்திய, இப்படத்தின் பின்னணியில் இருந்த என் நண்பர் அஜீவனுக்கும் என் நன்றிகள்.

பிஞ்சுமனம் என்ற இந்தக் குறும்படத்தில் பொதிந்துள்ள கருப்பொருள் நம் ஓவ்வொரு குடும்பத்திலும் நாம் சந்திப்பவை, குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது. தான் எதிர்பாக்கும் இந்த விஷயம் கிடைக்காத பட்சத்தில் பெரும் உளவியல் தாக்கத்துக்கு அது ஆளாகின்றது. இதுவே தொடர்ந்து கொண்டு போகும் போது ஒரு நிலையில், தன் பெற்றோரை வெறுத்து அது தன் முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது. இந்த உளவியற் சிக்கலின் ஆரம்பப படிநிலையை வெகு அழகாகக் காட்டுகின்றது பிஞ்சுமனம்.

குறும்படத்துக்கு அச்சாணி போன்றது நல்ல கமராக்கோணங்களும், திறமையான எடிட்டிங்கும். அதற்குச் சான்று இப்படம். கதையின் முக்கிய பாத்திரத்தையும், அது சொல்லும் சேதிகளையும் மையப்படுத்தி வெகு அழகாக நகர்கின்றது கமரா.
இப்படத்தில் வந்த காட்சிகளின் அழகியல் இப்படியிருக்கின்றது.
இந்தப் பிள்ளையின் சித்திரக்கீறல்களை சலனப்படுத்துகின்றது தன் தாய் தங்கையோடு விளையாடும் விளையாட்டு. பாருங்கள் அந்தக் காட்சியில் கமரா அந்தக் காட்சியை மையப்படுத்தி மெதுவாக நகர்கின்றது. தன் தாயின் கவனம் தன் மேல் பதியாத வேளை தன் அழகான சித்திரவேலையை வேண்டாவெறுப்பாக வட்டமிட்டு ஒதுக்குகின்றது. தாய் தங்கையின் விளையாட்டுக்குள் தானும் நுளைந்து வெறுப்புடன் திரும்புகின்றாள். தன் படுக்கையில் சாய்ந்து ஓரக்கண்ணால் தன் தாயுடன் இருக்கும் படத்தைப் பார்க்கின்றது. தன் தாயின் கவனம் இறுதியாகக் கிடைத்த திருப்தியில் அமைதியாகிறாள் அந்தச் சிறுமி.

சொல்ல வந்த செய்தியை மையப்படுத்தி, வேறெந்த அலட்டலில்லாத காட்சிகள்.அது போல் ஒரு குறும்படத்துக்கு மிக முக்கியமான உறுத்தல் இல்லாத இசை, கஞ்சத்தனமான வசனங்கள் இவையும் இப்படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. இங்கே கமரா தான் நிறையப் பேசியிருக்கிறது. ஒரு படத்தைப் பார்க்கின்றோம் என்ற உணர்வில்லாது, ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்திருந்து எடுத்த காட்சிகள் போல், நடித்த கலைஞர்கள் யதார்த்தமாகச் செய்திருக்கிறார்கள். "குழந்தைகளுக்கு பாரபட்சமற்ற அன்பை பெற்றோர் செலுத்த வேண்டும்.............." என்ற கருப்பொருளில் வந்த பிஞ்சுமனம்( Tender heart ) என்ற குறும்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்:
நடிப்பு: காவ்யா சிவன், சிறீதர் ஐயர், தீபா ராஜகோபால்
திரைக்குப் பின்னால்: சிறீகாந் மீனாட்சி,
சங்கரபாண்டி சொர்ணம்,
வெங்கடேஸ் கிருஸ்ணசாமி ,
எம்.பீ.சிவா,
மற்றும் அஜீவன்
எண்ணம் - எழுத்து - இயக்கம் தீபா ராஜகோபால்

கடந்த 2006 மே மாதம் அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்ற குறும்பட பயிற்சியின் பின்னர் பயிற்சி பெற்றவர்களால் உருவான 1.30 நிடங்களே ஓடக் கூடிய குறும்படம்.

குறும்படத்தைப் பார்ப்பதற்கு இங்கே சுட்டவும்:
பிஞ்சு மனம்

30 comments:

  1. ஈழத்திலும் 'பிஞ்சுமனம்' என்ற பெயரில் திரைப்படம் வந்துள்ளது. குறும்படம் என்று சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. அருமையான படைப்பை இங்கு தந்தமைக்கு நன்றி கானா.பிரபா

    ReplyDelete
  3. இக்குறும்படத்தில் சங்கரபாண்டியண்ணனும் பங்கேற்றதாகக் கூறினீர்கள், அவர் என்ன பங்களிப்புச் செய்தார் என்றறிய ஆர்வமாயுள்ளது. :) சிறீகாந் வலைப்பதிவர் சிறீகாந்தா? இது அஜீவன் அமெரிக்கா சென்ற பொழுது எடுத்த குறும்படம் போலும். அவருடைய குறும்படங்களில் பொதுவாக கமரா தான் பேசும், அதோடு அலட்டலான அறிவுரைகளிராது. அது பார்ப்பவர்க்கு ஏதொ உண்மையிலே நிகழும் ஒன்றை அந்நிகழ்விலுள்ளோர் அறியாமல் பார்ப்பது போன்ற உணர்வையளிக்கும். இப்படத்தை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //வசந்தன்(Vasanthan) said...
    ஈழத்திலும் 'பிஞ்சுமனம்' என்ற பெயரில் திரைப்படம் வந்துள்ளது. குறும்படம் என்று சொல்ல முடியாது. //


    வணக்கம் வசந்தன்
    புதிய தகவலுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  5. வணக்கம் நன்மனம்
    தங்கள் பின்னூடத்திற்கு என் நன்றிகள்

    ReplyDelete
  6. //Anonymous said...
    இக்குறும்படத்தில் சங்கரபாண்டியண்ணனும் பங்கேற்றதாகக் கூறினீர்கள், அவர் என்ன பங்களிப்புச் செய்தார் என்றறிய ஆர்வமாயுள்ளது. :) சிறீகாந் வலைப்பதிவர் சிறீகாந்தா? //

    வணக்கம் அநாமோதய நண்பரே
    இக்கலைஞர்கள் பற்றிய விபரம் நண்பர் அஜீவன் மூலமே கிடைத்தது. அவருக்கு உங்கள் மடல் அனுப்பி மேலதிக விபரம் கேட்கின்றேன்.


    //அஜீவன் அமெரிக்கா சென்ற பொழுது எடுத்த குறும்படம் போலும். அவருடைய குறும்படங்களில் பொதுவாக கமரா தான் பேசும், அதோடு அலட்டலான அறிவுரைகளிராது.//
    மிகவும் உண்மை, அதே நேரத்தில் இப்படம் அவரால் பயிற்சியளிக்கப்பட்ட தீபா ராஜகோபாலின் இயக்கத்தில், அஜீவனின் பயிற்சிப் பாசறை முடிவில் இயக்கப்பட்டது.

    ReplyDelete
  7. ///
    குறிப்பாக ஒரு பிள்ளை பிறந்து அதற்கு மனதளவில் முழு முதிர்ச்சி பெற முன்பே, புதிதாக வந்து சேரும் தம்பியோ தங்கையோ இந்தப்பிள்ளைக்குத் தன் பெற்றோரால் கிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பங்கு போட வந்து விடுகின்றது. ஒரு பிள்ளைக்கு தன் பெற்றோர் தான் முழு உலகமுமே, எந்நேரமும் தன் பெற்றோரின், சிறப்பாகத் தன் தாயின் கவனம் தன்மேல் முழுமையாகப் பதிந்திருப்பதையே அது விரும்புகின்றது.
    ///

    என் தம்பி பிறந்த சமயம் எனக்கும் இப்படி உணர்வுகள் இருந்ததாம். என அம்மாவை நான் கிள்ளி வைக்கிற மாதிரி புகைப்படம் எல்லாம் உண்டு( என்னைக் கவனிக்காததால் ). நல்ல குறும்படம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  8. வணக்கம் குமரன்
    தங்கள் சுயசரிதத்தைத் தெரிந்துகொண்டதும் மகிழ்ச்சி:-)

    ReplyDelete
  9. ஈழத்தில் பிஞ்சுமனம் என்று ஒரு திரைப்படம் வந்ததாக தெரியாமல் இருந்தது வசந்தன்.
    தகவலுக்கு நன்றி!

    நல்லவேளை Tender heart பெயரும் இணைந்ததால் தப்பினேன்.

    என் வலைப்பதிவில்
    "அந்த பிஞ்சு முகம்" என்ற பெயரில் ஒரு சம்பவ கதையை எழுதியிருந்தேன்.
    http://ajeevan.blogspot.com/2005/12/blog-post.html

    அதன் பாதிப்போ என்னவோ........
    இந்த குறும்படத்துக்கு அந்த பெயரை வைத்தால் என்ன என்று கலைஞர்களிடம் கேட்டேன்.

    அவர்கள் ஒப்புதலோடு இது தலைப்பானது.

    நன்றி வசந்தன்.

    ReplyDelete
  10. நன்றி நன்மனம்

    ReplyDelete
  11. வணக்கம் அநாமோதய நண்பரே

    சங்கரபாண்டியன் அவர்கள்
    இந்த பயிற்சிப்பட்டறை மற்றும் குறும்பட திரையிடல் ஆகிவற்றில் முக்கிய பங்களிப்பு செய்தவர்.

    இவரும் பயிற்சி பட்டறையில் இருந்தார்.
    எல்லோருமே இறுதியில் தனித் தனியாக குறும்படத்துக்கான கதைகளை எழுதக் கொண்டு வந்தார்கள்.

    அனைவரது வசதிகள்- நேரம்- நிலமை ஆகியவை பற்றி சிந்தித்ததில் பிஞ்சுமனம் கதையை குறும்படமாக்குவது இலகுவானது என்ற முடிவுக்கு வந்தோம்.

    4 நாட்கள் மாலை வேளைகளில் 8.00மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடந்த பயிற்சி வகுப்புகளில் 4வது நாளான இறுதி தினம் உருவானதுதான் இக் குறும்படம்.

    மற்றவர்களது கதைகளும் நல்லதாகவே இருந்தது.
    அவற்றை படமாக்குவதற்கு அதிக காலம் தேவைப்பட்டதை சுட்டிக் காட்டினேன்.

    அதை ஏற்று "பிஞ்சுமனம்" டிஸ்கசன் மற்றும் ஏனைய தொழில் நுட்ப உதவிகளில் அனைவரோடும் சங்கரும் பங்கேற்றார்.

    ஆங்கில Tender heart தலைப்புக்கு தமிழ் பெயர் வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவரும் சங்கர்தான்.

    சினிமா என்பது தனி மனித படைப்பாக முடியாது. அது ஒரு புரிந்துணர்வுள்ள கூட்டு கலை குடும்பத்தின் செயல்பாடாகும்.

    "சிறீகாந் வலைப்பதிவர் சிறீகாந்தா?"

    ஆம்.
    அவர் வீட்டில்தான் பயிற்சி பட்டறையும்
    படப்பிடிப்பும் நடைபெற்றது.

    "குறும்படங்களில் பொதுவாக கமரா தான் பேசும், அதோடு அலட்டலான அறிவுரைகளிராது. அது பார்ப்பவர்க்கு ஏதொ உண்மையிலே நிகழும் ஒன்றை அந்நிகழ்விலுள்ளோர் அறியாமல் பார்ப்பது போன்ற உணர்வையளிக்கும்." என்ற கருத்துகள் தெம்பைத் தருகிறது.
    மிக்க நன்றி.........

    ReplyDelete
  12. நன்றி குமரன்

    உங்களைப் போல் பலரது வாழ்வோடு
    இக் குறும்படம் இணைந்த பாதிப்பை பகிர்ந்து கொண்டதாய் அறிந்து மகிழ்வாய் இருக்கிறது.

    ReplyDelete
  13. வணக்கம் அஜீவன்

    பின்னூட்டமிட்ட அன்பர்களின் கருத்துக்களை உள்வாங்கித் தங்கள் பதிலை அளித்தமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  14. பிரபா!
    அருமையான ஒரு படைப்பு. நானறிந்தவரையில், அஜீவன் மிகநல்ல சினிமாக்கலைஞன். குறிப்பாக அவரது ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் ரசிக்கத்தக்கவை. இன்னும் சொல்லப் போனால் அவரது கமெராக்கண்களுக்கு நான் பரம ரசிகன்.
    பங்குகொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவாக்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. வனக்கம் மலைநாடான்
    குறும்படப் படைப்பாளியான தங்களிடமிருந்து வரும் இப்பதில் கண்டு அகமகிழ்கின்றேன்.

    ReplyDelete
  16. நன்றி மலைநாடான்.

    தங்களைப் போன்ற படைப்பாளிகள்
    மனம் திறந்து பேசுவது தொடர
    வேண்டும்.........
    நாம் எல்லாம் கலை உறவுகள்......

    மனது ஈரமாயிருக்கிறது
    கானபிரபா வழி வந்த பலரது அன்புக்கு........

    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  17. பிரபா,

    படத்திற்கு மதிப்புரை தந்து, பலர் பார்க்கும்படி செய்ததற்கு மிக்க நன்றி. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    அஜீவன் அண்ணனுடன் கழித்த ஒரு வார காலம் மிகவும் சுகமாக, சுவாரசியமாக இருந்தது. அதன் முடிவில் அஜீவன் தலைமையில் நாங்கள் உருவாக்கிய இப்படம் இவ்வளவு அழகாக வந்ததற்கு அஜீவன் தான் முதல் + முக்கியக் காரணம். படம் என் வீட்டில் எடுக்கப்பட்டது என்பது மட்டும் தான் எனக்குப் பெருமை :-)

    நன்றி,

    ஸ்ரீகாந்த்.

    ReplyDelete
  18. ஈழத்தில் வந்த 'பிஞ்சு மனம்' திரைப்படம், ஒரு சிறுமியையும் சொந்தங்களால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையிலுள்ள பணக்கார முதியவரையும் மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.
    அப்படத்தில்தான்
    "பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது"
    என்ற குமாரசாமி பாடிய பாடல் இடம்பெற்றது. ஈழத்தில் மிகப்பிரபலமான பாடல். முதியவரின் உணர்வுகளைச் சொல்லும் பாடல்.

    ReplyDelete
  19. அஜீவன்,
    தங்கள் விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி. சங்கரபான்டியண்ணன் தமிழில் பெயரிட விழைந்தது அவரின் மேல் நான் வைத்திருந்த மதிப்பை மேலும் கூட்டுகிறது.

    ReplyDelete
  20. அஜீவனின் அழியாக் கவிதை fell the pain கமெராக் கோணங்கள் எனக்கு நிறையப் பிடிக்கும்
    பிரகலாதன்

    ReplyDelete
  21. வணக்கம் ஸ்ரீகாந்த்.

    அஜீவன் போன்ற பொருத்தமான ஆசானை உங்கள் குறும்படப் பயணத்தில் பெற்றிருக்கிறீர்கள். அவரைப் போன்று தொழில்நுட்பத் தரத்தில் உயர்ந்த படைப்புக்களை நீங்கள் தருவீர்கள் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  22. //அஜீவனின் அழியாக் கவிதை fell the pain கமெராக் கோணங்கள் எனக்கு நிறையப் பிடிக்கும்
    பிரகலாதன் //
    மிகவும் நன்றிகள் பிரகலாதன்

    ReplyDelete
  23. வணக்கம் வசந்தன்

    புதிய நல்ல தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். குறிப்பாக "பூத்தகொடி" என்ற பாடல் ஒரு தனிப்பாடல் தொகுப்பு என்று இதுவரை நான் எண்ணியிருந்தேன்.

    ReplyDelete
  24. I think some people like Ajeevan not for his craft of cinematography, but for his vehemently anti-ltte stand, especially whenever he opens it in front of bunch of eelamhaters. Prove me if I am wrong. Have you given a thought on why the question on Sakarapandiyan popped up here?

    ReplyDelete
  25. வணக்கம் அநாமோதய நண்பரே

    இந்தக் குறும்படம் நீங்கள் சொன்ன விடயம் தவிர்ந்தது. இந்தப் படைப்பைப் பற்றிய பார்வையாகத் தான் இந்தப் பதிவு இருக்கிறது. இதன் உருவாக்கதில் உழைத்த ஒவ்வொருவரும் எந்தவிதமான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி ஆராய்ந்து பின் இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அதற்கான தேவையும் இந்தப் படத்துக்கும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  26. கானா பிரபா, அஜீவன் மற்றும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே இங்கு ஸ்ரீகாந்த் சொன்னது போல் இந்தப் படத்திற்கு அளிக்கப் படும் பாராட்டுக்களுக்குத் தகுதியானவர் அஜீவன் தான். அதிலும் அனானி வாசகர் எதிர்பார்த்தது போல் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அஜீவனின் பதில் அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது, அவருக்கு நன்றி.

    எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அஜீவனின் கலைத்தன்மையையும், தொழில்நுட்பத்திறனையும் இரசிப்பவன் நான். தமிழில் அவரைப் போன்ற திறமையாளர்கள் போற்றப் படவேண்டும் என்பதைத் தவிர, எனக்கு இருக்கும் வேறு எந்த திறமையை நம்பியும் இந்த முயற்சியில் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. இந்த உண்மையை எடுத்துச் சொல்ல உதவிய அந்த அனானி பின்னூட்டத்துக்கு என் நன்றி.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  27. தங்கள் வருகைக்கு நன்றிகள் சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  28. அனைவருக்கும் நன்றிகள்.

    சிறீகாந் மற்றும் சங்கரபாண்டி கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
    மன்னிக்கவும்.

    பெருந்தன்மை என்ற விதத்தில்
    நாம் நம்மை இழந்து விடக் கூடாது.

    அதேபோல் அடுத்தவர் உழைப்பை
    நாம் உதாசீனப்படுத்தவும் கூடாது.
    இது அறிவுரையல்ல அனுபவம்.

    ஆரம்பகாலங்களில் நானெல்லாம்
    சிலரது படைப்புகளில் வேலை செய்து என் பெயர்
    இறுதியில் வரும் என்று நம்பி
    வராமல் நான் பட்ட வேதனையை
    அடுத்தவர்களுக்கு கொடுக்க நான் தயாரில்லை.

    நான் வேலை செய்யும் படங்களில்
    தேவையற்றவர்களை இணைத்துக் கொள்வதில்லை.
    இணைந்தவர்களை மறப்பதுமில்லை.

    ஒரு கதை அல்லது
    கட்டுரை என்பதை தனி ஒரு மனிதனால் எழுத முடியும்.
    அவர் படைப்பாளிதான்.

    ஆனால்
    அதை ரூல் வடிவாக்க உழைப்பதில்
    அச்சகத்தின் உரிமையாளரது பெயரை

    ReplyDelete
  29. (தவறான விசையை அழுத்தி விட்டேன் பிரபா விரும்பினால் இணைத்து சரி செய்யலாம்.)

    அந்த நூலை யாராவது ஒருவர் எழுதலாம்.
    அதை பிரசுரிக்க ஒரு
    அச்சகம் தேவை.
    அச்சக உரிமையாளருக்கு நன்றி சொல்கிறோம்.
    அதன் பின்னணியில்
    அச்சுக்கோர்க்க அல்லது அதற்காக
    மாய்ந்து உழைக்கும்
    அந்த உழைப்பாளியின் பெயர் குறிப்பிடுகிறோமா?
    உழைப்பாளர் பற்றி பேசும்
    நூல்களை (புத்தகங்களை) வெளியிடுவோரே சிந்திக்காத போது
    மற்றவர்கள் மட்டும் சிந்திப்பார்களா என்ன?

    சினிமா
    ஒரு தனி மனித படைப்பாக முடியாது.
    எதுவுமே அப்படித்தான்.......
    இதில் மாற்றுக் கருத்து எனக்குள் இல்லை.

    ஒரு இயக்குனர் தனியாக படம் பண்ண முடியாது.
    அதற்கு ஒரு கதை தேவை.
    அது நமது அல்லது
    இன்னொருவரது வாழ்வின் ஒரு பகுதியை
    தெரிந்தோ தெரியாமலோ
    எடுத்துக் கொள்கிறோம்.
    அப்போதே அவர்கள் இணைகிறார்கள்.
    இது கூட கதாசிரியர் வழிதான்........
    கதைக்கு கருவான அவர்கள் விடுபட்டுத்தான் போகிறார்கள்.

    எழுதிய கதை மற்றும்
    இதிலுள்ள பிரச்சனைகளை நாம் யாரோடாவது கலந்துரையாட வேண்டியிருக்கிறது.
    இதை டிஸ்கசன் என்கிறோம்.

    டாக்யுமன்றி படங்களில் கூட பலரது புத்தகங்கள் - பத்திரிகை தகவல்கள் மற்றும் அக் காலத்தில் வாழவோர் ஆகியோரிடமிருந்து தகவல்களைப் பெறுகிறோம்.

    இங்கேதான் திட்டமாக்கலே ஆரம்பமாகிறது. இவர்களில் பலர் முகம் தெரியாதவர்கள்.
    இவர்கள் பெயர் டைட்டலில் பெரும்பாலும் வருவதில்லை.
    இதை நான் கலவியல் போன்றது என்பேன். இங்குதான் குளறுபடிகள் காலம்.
    பிறக்கப் போகும் குழந்தை பற்றிய தெளிவில்லா காலம்.
    இங்கே சரிவரலாம்.வராமலும் போகலாம்.

    கரு முறையாக இணைவது போன்றது அதற்கான திரைக்கதை உருவாக்கம்.
    இது திரைக்கதை ஆசிரியர் பங்கு.

    இக் கதையை ஒளிப்பதிவு செய்ய ஒரு ஒளிப்பதிவாளர் தேவை.
    அவர் கதையை மேவாத ஒளிப்பதிவை செய்பவராக இருக்க வேண்டும்.
    கதையை - கதாபாத்திரங்களை ரசிகர்களோடு இணைக்காமல் மேவும் ஒளிப்பதிவாக இருந்தால் அதுவே தப்புதான்......

    இதனால்தான் படம் நல்லாயிருக்கு ஒளிப்பதிவு சுப்பர்......படம் சொதப்பல் நம்ம சினேகாவுக்காக பார்க்கலாம்.......இல்லடா நம்ம இளசு பாட்டு அசத்திட்டு என்பது போன்ற மன உணர்வுகள் ரசிகர்களுக்கு வருகின்றன.

    இவை தேர்வானால் கதையின் கதாபாத்திரமாக வாழ தகுந்த நடிக - நடிகையர் தேவை.

    இதன் பின்னணியை உருவாக்கும் லொகேசன் தேவை.
    அதற்காக ஒரு ஆர்ட் டைரக்டர் தேவை.

    உதவி.........என்ற பெயரில்
    பலர் தேவை.

    ஒளிப்பதிவு முடிந்ததும்.

    தொகுப்புக்கு நல்ல எடிட்டர் தேவை.
    அவருக்கு கலையுணர்வு இல்லை என்றால் அல்லது அவருக்கு அப்படியான கதை பற்றிய தேடுதல் பரிட்சயம் இல்லாதவராக இருந்தால்
    இயக்குனருக்கும் அவருக்குமிடையே
    வாக்குவாதங்கள்தான் வேலையை விட அதிகமாக இருக்கும்.

    இறுதியில் இசையின்
    வல்லமை........
    உணர்வுகளை தட்டி வாழ வைக்கும்
    தேவை கருதிய பின்னணி இசை.......

    இதுதான் தாய்க்கும் சேய்க்குமான தொப்புள் உறவு வழி இரத்தத்தை பாச்சுகிறது.

    அது தாயை விட்டு வெளியே
    வந்தாலும்
    தொப்புள் கொடி அறுபட்டாலும்
    அதன் வழி வந்த இரத்தம்
    அந்த குழந்தையை வாழ வைக்க முதன்மையாகிறது.

    பிறக்கும் குழந்தை எப்படி வரும்
    என்பதை இயக்குனர் மட்டுமல்ல
    அந்த படைப்பை உருவாக்கத்தில் வாழ்ந்த யாராலும் நிச்சயிக்க முடியாது.
    நாம் அதோடு வாழ்ந்தவர்களில்லையா?
    நமக்கு பிடிப்பததெல்லாம்
    மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்பதில் என்ன நிச்சயம்?

    பிறந்த குழந்தை சமுதாமெனும்
    ரசிகர்கள் முன் நடக்கும் போது
    அவனை (அந்த படைப்பை) ஏற்றுக் கொள்ளும் விதமே அவனது அதாவது
    படைப்பின் வெற்றி.........

    அதுவே அந்தக் கலைக் குடும்பத்தின் வெற்றி!

    இது என் தாழ்மையான அபிப்பிராயம்.

    சில கேள்விகளை நான் சட்டை செய்வதில்லை.
    நடக்கும் பாதையில் முள்ளும் இருக்கும் கல்லும் இருக்கும்
    ஆனால் நடந்தே ஆகவேண்டும்.

    "நன்பனே நீ நட
    நானும் உன்னோடு நடக்கிறேன்.
    அது உன் அருகிலில்லாமல் இருக்கலாம்.......
    நாமெல்லாம் அப்படித்தான்
    உலகம் உருண்டை. என்றோ ஒரு நாள் சந்திப்போம்.
    அந்த நம்பிக்கையோடு வாழ்........

    ஒரு படைப்பு காரணமாக பேசப்படுவதற்கும்
    ஒருவன் மேல் உள்ள அபிமானத்தால் பேசப்படுவதற்கும்
    நிறைய வேறுபாடு உண்டு.

    முகம் தெரியாத நண்பர்கள் உறவுகள் எனக்கு அதிகம்.
    அவர்கள் என்னோடு வாழ்கிறார்கள்.
    தூர இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போன்ற ஆறுதலை தருகிறார்கள்........

    என்னிலும் தவறுகள் இருக்கும்.
    அதுஎனக்குத் தெரியாது.
    கண்ணாடி இல்லாமல் முகம் பார்க்க முடியாதவன் நான்
    உன் கருணை எனக்கு இருக்கும் வரை என் முகத்தின் அசிங்கத்தை மட்டுமல்ல
    அழகைக் கூட சொல்கிறாய்.
    எனவேதான் நான் உன்னை விரும்புகிறேன்.

    புறமுதுகில் குத்தாதே
    அது தமிழ் மறவனுக்கு அழகல்ல........

    என்றோ நானும்
    உன்னோடு உணவருந்துவேன்.......

    சந்திப்புகள் எதிர்பாராதவை
    பிரிவுகள் நிரந்தரமானவை"

    பணிவன்போடு
    உங்கள் அஜீவன்.

    ReplyDelete
  30. வணக்கம் அஜீவன்
    தங்களின் முழுப் பதிவையும் இணைத்திருக்கின்றேன்.

    ReplyDelete