Pages

Thursday, July 06, 2006

மறக்கமுடியாத மலரக்கா

இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக என் வானொலிப் பணி மூலம் சந்தித்த எத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஏராளம் அனுபவங்களை நான் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அவர்களை விடவும், அந்த அனுபவங்களை விடவும் மேலானதொரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது இந்த நிகழ்வு.

நான்கு வருடத்துக்கு முன் நான் செய்த வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பெயர் " காதலர் கீதங்கள்" வெறுமனே ஒப்புக்குப் பாடியவர் பெயரையும், பாடல் இடம் பெற்ற திரைப்படத்தையும் சொல்லிப் பாடல் ஒலிபரப்புவது எனக்குப் பிடிக்காத அம்சம். எனவே ஒவ்வொரு காதலர் கீதங்கள் நிகழ்ச்சிக்கும் ஓவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பிட்டு, கவிஞர் மு.மேத்தா, அப்துல் ரகுமான், மற்றும் ஈழத்துக்கவிஞர்கள், அறியப்படாத தமிழ் நாட்டுக் கவிஞர்கள், ஹைக்கூ கவிதைகள் என்று இவர்களின் ஒவ்வொரு கவிதையிலும் நல்லதொரு இரண்டடி மட்டும் எடுத்து அந்த அடிகளுக்குப் பொருத்தமான பாடல்களையும், பின்னணியில் மென்மையான இசை வழங்கி நிகழ்ச்சிகளைப் படைத்து வந்தேன். புதிய பாணியில் கிடைத்த
பாடற்சாப்பாடு, நேயர்களைப் பொறுத்தவரை நல்விருந்தாக அமைந்தது.

ஓரு நாள் இதே போல் காதலர் கீதங்கள் நிகழ்ச்சியை நான் செய்து முடித்துவிட்டு வீடு திரும்ப எத்தனிக்கையில் வானொலிக் கலையகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

" நீர் நல்ல நல்ல பாட்டுப் போடுகிறீர் ஐசே, பெட்டையள் கியூவில உம்மை மாப்பிளை கேக்க வரப்போகினம்" இப்படி சிரித்துக்கொண்டே பேசியது மறுமுனையில் ஒரு பெண்குரல். அந்தக் குரலுக்கு வயசு நாற்பதிற்கும் மேல் இருக்கும்.

" அப்பிடியே.......!பரவாயில்லை" என் வழமையான ட்ரேட் மார்க் அசட்டுச் சிரிப்புடன் நான்.

பிறகு அந்தப் பெண் நேயர் மிகுந்த உரிமை எடுத்துக்கொண்டு தொடர்ந்து வந்த காலத்தில் நான் படைத்த நிகழ்ச்சிகள் பற்றித் தன் அபிப்பிராயம் கூறுவதும்,
"எனக்கு உம்மட குரலைக் கேட்டால் என்ர தம்பி மாதிரி இருக்குதப்பா" என்று சொல்வதுமாகத் தன் தொலைபேசி நட்பை தொடர்ந்து வந்தார்.

ஒருநாள் தான் யார் என்பதைப் பற்றியும் எனக்குச் சொன்னார் இப்படி.
"எங்கட அப்பா, அம்மா நானும் என்ர 2 தம்பிமார், 2 சகோதரிகள் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அப்பா குடிச்சுக் குடிச்சு எல்லாத்தையும் அழிச்சுப் போட்டார். நான் தான் தம்பி, தங்கச்சிமாரை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு. சிங்கப்பூருக்குப் போய் வேலை செய்தன். அவங்களும் இப்ப கல்யாணம் கட்டி இப்ப யூரோப்பில, எனக்கு இனிக் கல்யாணம் என்னத்துக்கு எண்டு விட்டிட்டன். சகோதரங்கள் யுரோப்பில எண்டாலும், நான் ஒஸ்ரேலியா வந்திட்டன்," என்றார் மலர் என்ற அந்த நேயர்.

தொடர்ந்தகாலங்களிலும் அவர் என் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுமாக ஒருவருடமாகப் போன் மூலமே பேசிக்கொண்டார். வேடிக்கையாகப் பேசிக் கொண்டே
"எங்கையப்பா, உந்தப் பாட்டெல்லாம் எடுக்கிறனீர்? ,
நான் ஒரு நாளும் கேட்டதில்லை" என்று சீண்டுவார்.
இல்லையக்கா, எல்லாம் சீடியில தான் இருக்குது,
நான் இசையமைக்கிறதில்லை என்று சிரித்துச் சமாளிப்பேன்.
"போறபோக்கை பார்த்தால் நீரும் இசையமைப்பீர் போலக் கிடக்குது" என்பார் பிடிகொடுக்காமல்.

சிட்னியில் அவர் இருந்தாலும் ஒருமுறை கூட அவரை நேரே பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

திடீரென்று ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் எனக்குப் போனில் பேசவேயில்லை. எனக்கு இது மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும், " ஏதாலும் வேலைப் பழு அவவுக்கு இருக்கும்" என்று நான் எனக்குள் சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வானொலிக் கலையகத்தில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

"தம்பி பிரபா, நான் மலரக்கா பேசிறன்" அவரின் குரலில் தளர்ச்சியிருந்தது.

"என்னக்கா குரல் ஒரு மாதிரியிருக்குது" இது நான்

"இல்லையப்பு, இவ்வளவு நாளும் நான் நல்லா உலைஞ்சு
போனன் கொஸ்பிடலும் வீடும் தான்" இது மலரக்கா.

"என்ன பெரிய வருத்தமோ?"

"கான்சர் எண்டு சொல்லுறாங்கள், ட்ரீட்மெண்ட் எடுத்துகொண்டிருக்கிறன்"
தளர்ச்சியான குரலில் மலரக்கா.

எனக்கு இடியே விழுந்தது போல இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல்
"உங்களுக்கு ஒண்டுமில்லையக்கா, சிட்னி முருகனிட்டை எல்லாத்தையும் விடுங்கோ,
இந்த நாட்டில உதெல்லாம் ஒரு வருத்தமே" என்றேன் நான். அப்போது என் குரலில் வலிமை இருந்தாலும் மனசு தளர்ந்து போயிருந்தது.

" அப்பிடியே சொல்லிறீர்? உண்மையாவே" என்று அப்பாவியாகக் கேட்டார் மலரக்கா.

" ஓண்டுக்கும் யோசியாமைப் பாட்டைக் கேளுங்கோ அக்கா, இண்டைக்கு நல்ல செலக்க்ஷன் கொண்டுவந்திருக்கிறன்" என்றேன் நான்.

" சரி தம்பி" என்றவாறே விடை பெற்றார் அவர்.

வேலை நிமித்தம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் நான் அப்போது செல்ல வேண்டியிருந்தது.
மலரக்காவிற்கு நோய் முற்றி இப்போது ஆஸ்பத்திரியில் முழுதுமாக அட்மிட் ஆகிவிட்டாராம். எங்கள் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களும் சில நேயர்களுமாக 2002 தீபாவளி தினத்தை மலர் அக்காவுடன் அவரின் வார்ட்டில் கொண்டாடினார்களாம். நகுலாக்கா என்ற மலரக்காவின் நண்பி தான் அவரோடு கூட இருந்து கவனித்தாராம். டாக்டர் ஏதேனும் சொல்லும் போது நகுலாக்கா அழுவாராம். மலரக்காவோ
" சும்மா இரும், இவ்வளவு நாளும் நான்
வீட்டுக்காரருக்காக வாழ்ந்திட்டன், இனித்தான் எனக்காக ,
நல்ல சந்தேசமாய் வாழப்போறன்,
பாரும் எனக்கு எல்லா நோயும் பறந்திடும்"
என்று சிரித்துக்கொண்டே சொல்வாராம். நாள் முற்ற முற்ற மலரக்காவைக் கான்சர் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுக் கொண்டே வந்ததாம். நகுலாக்காவைச் சமாளிக்கத், தன் சக்தியெல்லாம் திரட்டித் தளர்ந்து போன தன் உடல் நிலையை நல்லது போலக் காட்ட நினைக்கும் மலர் அக்கா கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து போனார்.

நான் சீனாவிலிருந்து வந்து சேர்ந்த நாள் மறுதினம் நவம்பர் 12, 2002 காலை வானொலிப் போடுகிறேன், மலரக்கா இறந்த செய்தி வந்தது. தகனச் சாலைக்குச் செல்கிறேன். பெட்டிக்குள் மலரக்கா இருக்கிறார். முதன் முதலாக அவரைப் பார்க்கிறேன். கண்மூடிப் படுத்திருக்கிறார். மலரக்கா, நான் வந்திருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன்.

எமது வானொலி நிலையம் செய்த முன் ஏற்பாட்டுப்படி தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான " மலரே மெளனமா" என்ற பாடல் ஒலிக்கின்றது. பாடல் ஒலித்து ஓய்ந்ததும் திரைக்குள் மறைகின்றது மலரக்காவின் சவப்பெட்டி.வந்த எல்லோரும் குமுறிக் குமுறி அழுகின்றார்கள். நான் வலிந்து இழுத்துக்கொண்டே என்னைக் கட்டுப்படுத்துகின்றேன், உடல் மட்டும் குலுங்குகின்றது.

வீட்டுக்கு வந்து குளியலறையைப் பூட்டிவிட்டு முகக்கண்ணாடியை வெறித்துப் பார்க்கின்றேன். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறுடுகின்றது. குமுறிக் குமுறி அழுகின்றேன் நான்.
அன்று அழுது தீர்த்துவிட்டேன், இன்றும் மலரக்காவை நினைத்து மனசுக்குள் மெளனமாக அழுகின்றேன். மலரக்கா என்ற நல்லதொரு நேயரை இழந்துவிட்ட சோகம் நான் வானொலி வாழ்வை விட்டுப் போகும் வரையும்,

ஏன்.... நான் சாகும் வரைக்கும் இருக்கும்.

(யாவும் உண்மையே)

68 comments:

  1. Enna solrathunne theriyala sir.

    -kajan

    ReplyDelete
  2. முகம் தெரியாத அந்த மலரை உங்கள் எழுத்தில் கண்ட போது கண் கலங்கி விட்டது.

    ReplyDelete
  3. ஓடுங்கிக்கொண்டிருந்த ஒரு உயிருக்கு
    உற்சாகம் அளித்த பாடல் இசைத்தீர்கள்
    என்று சமாதானப் பட வேண்டியது தான்.

    காலத்தின் விளையாட்டில் சட்டங்களும் இல்லை வெற்றியும் இல்லை .

    ReplyDelete
  4. உணர்வுகளை நல்ல எழுத்தாக வடிவமைத்திருக்கிறீர்கள். நெகிழ்ச்சியான இடுகை.

    ReplyDelete
  5. கண்களில் கண்னீரை வரவழைத்தது.

    ReplyDelete
  6. வணக்கம் கஜன்

    வாசித்துத் தங்கள் கருத்தளித்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  7. மலரக்காவை நினைக்கையிலும் அவர்களுடன் உங்களது வானொலி நிலையம் கொண்டிருந்த பந்தத்தை நினைக்கையிலும் நேரடி சம்பந்தம் இல்லாத போதும் ஏதோவொரு நூல் சிலரை இப்படித்தான் இணைத்து விடுகிறது. அந்த நூலைத்தான் நாம் அன்பென்றும், மனித நேயமென்றும் அறிகிறோம்..

    // தகனச்சாலையில் வைத்து அவர் உடல் எரிக்கப்படுவதற்கு முன் நாம் ஏற்பாடு செய்து கொண்டுபோன போர்டபிள் சீடி பிளேயரில் மலரக்காவிற்குப் பிடித்த பாடலான " மலரே மெளனமா" என்ற பாடல் ஒலிக்கின்றது. //

    மலர் மௌனமானாலும், சாந்தாமாகத்தான், மௌனமானது என நம்புவோம்....

    ReplyDelete
  8. படித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

    (நான் முன்பே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் அது வரவில்லையெனில் இதனை வெளியிடுங்கள்.)

    ReplyDelete
  9. பிரபா

    புற்றுநோய் மருத்தவமனையில் coucellor ஆக பணியாற்றிய எனக்கு இதுபோல பல அனுபவங்கள்...இதை படித்தவுடன் என் நினைவுக்கு வரும் பலர்.. எப்பொழுதும் என் பின்னாலேயே சுத்திகொண்டிருந்த பனிரெண்டே வயதான சிவகுமார்.. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கார்த்திக்.. திருமணம் ஆகி மூன்றே வருடங்கள் ஆகி இருந்த பக்கத்து வீட்டு தாமு அண்ணா, தன் பெண்ணின் திருமணம் முடியும் வரை தன் உயிரை காப்பாற்றச் சொல்லி போராடி, தோற்ற, 45 வயதான ராஜன்..இதை எல்லாவற்றையும் விட.. புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களை அன்புடன் ஆதரித்து, கவனித்து வந்த எங்கள் Dr.பரிமளரங்கன் , ஒரு விபத்தில் உயிர் இழந்தது...

    நெஞ்சம் கனக்கிறது.....
    இருந்த ஒரே மகனையும் இழந்து தவிக்கும் சிவகுமாரின் பெற்றோர்கள், 15 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் என்னை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்.. அந்த சோகம் சிறிதும் குறைந்த மாதிரி தெரியவில்லை

    நல்ல பதிவு...வாழ்த்துக்கள்

    மங்கை

    ReplyDelete
  10. வணக்கம் சந்திரவதனா அக்கா

    என் பதிவின் உணர்வேட்டத்தோடு கலந்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  11. கார்திக்வேலு said...
    ஓடுங்கிக்கொண்டிருந்த ஒரு உயிருக்கு
    உற்சாகம் அளித்த பாடல் இசைத்தீர்கள்
    என்று சமாதானப் பட வேண்டியது தான்.

    வணக்கம் கார்த்திக்வேலு

    அந்தத் திருப்தியில் தான் என் வானொலிப்பணி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சொந்த நாட்டையும், உறவுகளையும் பிரிந்து அந்நியபட்டு வாழும் வாழும் எம் உறவுகளின் பல கதைகள் என் வானொலி வாழ்வில் கண்டது, ஊமையாக என்னுள் அவை இன்னும் இருக்கின்றன.

    ReplyDelete
  12. வணக்கம் பிரபா,

    எனது மச்சாளும் சென்ற புரட்டாதி மாதம் இவவாறே புற்றுநோய் எண்டு கணடுபிடித்து 6 மாதத்தில் 50 வயதில் போய்ச்சேர்ந்துட்டா. மகரகமவில் டொக்டர் அனுஸ்யன் நிறைய உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்.
    மகரகம சென்றால் வாழ்வின் அர்த்தம் புரியும். ஐரோப்பாவிலிருந்து சென்ற எங்களுக்கு ஏதாவது உதவிகளை இந்த நோயாளிகளுக்கு செய்ய வேண்டும் என்றே தூண்டியது.
    அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் சிலர் பணம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளைக் கவனிக்கிறார்கள்.
    அருகில் இருக்கும் விகாரையிலிருக்கும் பிக்குகள் இன,மத பேதமில்லாமல் எல்லோருக்கும் பண, இருப்பிட வசதி செய்து கொடுக்கின்றனர்.அவர்களிலேயே உண்மையான பௌத்த துறவிகளைக் காண்கிறேன்.

    அன்புடன்
    பிரகலாதன்

    ReplyDelete
  13. வணக்கம் குமரன்

    தங்கள் பின்னூடத்திற்கு என் நன்றிகள், என் மின்னஞ்சலில் ஏதோ கோளாறு போல இருக்கின்றது, தாமதமாகத் தான் மடல்கள் வந்தன.

    ReplyDelete
  14. //லிவிங் ஸ்மைல் said...
    நேரடி சம்பந்தம் இல்லாத போதும் ஏதோவொரு நூல் சிலரை இப்படித்தான் இணைத்து விடுகிறது. அந்த நூலைத்தான் நாம் அன்பென்றும், மனித நேயமென்றும் அறிகிறோம்..//


    வணக்கம் லிவிங் ஸ்மைல்
    தங்கள் கூறுவது மிகச்சரி

    ReplyDelete
  15. வணக்கம் நங்கை

    தங்களின் அனுபவப்பின்னூட்டம் மூலம் என்னை மீண்டும் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  16. பிரபா,
    வாசிப்பவருக்கு உங்கள் உணர்ச்சிகளை பிசிறில்லாமல் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். மலரக்காவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  17. வணக்கம் பிரகலாதன்

    கொட்டமடிக்கும் மனிதர் இறுதியில் ஞானோதயம் பெறும் இடமாக இவை இருந்தாலும், வாழ்ந்து அனுபவிக்க வேண்டியவர்களையும் இந்நோய் சாப்பிடும் போது "சவே உனக்கொரு சாவு வராதா?"

    ReplyDelete
  18. வணக்கம் காசி

    தங்கள் அன்புப் பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  19. மங்கை...நங்கை அல்ல :-))

    ReplyDelete
  20. பிரபா!
    வல்லமையான காலத்தைக் குடும்பத்துக்கும்; வருத்தக் காலத்தைத் தனக்குமாக வாழ்ந்து முடித்த இந்த மலரக்கா! தமிழர் பலரின் வாழ்வியல் அடையாளம். உங்கள் பதிவு பலரை நினைக்க வைத்தது.
    "எரியும் மெழுகு வர்த்திகள்"
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  21. மங்கை said...
    மங்கை...நங்கை அல்ல :-))

    மன்னிக்கவேண்டும் மங்கை:-((

    ReplyDelete
  22. johan -paris said...
    பிரபா!
    வல்லமையான காலத்தைக் குடும்பத்துக்கும்; வருத்தக் காலத்தைத் தனக்குமாக வாழ்ந்து முடித்த இந்த மலரக்கா! தமிழர் பலரின் வாழ்வியல் அடையாளம்.

    நன்றாகச் சொன்னீர்கள் அண்ணா

    ReplyDelete
  23. நினைவுக்கு வரும் H.H.Dalai Lama வின்
    வரிகள்

    " Each of us in our own way can try to spread compassion into people’s hearts. Western civilizations these days place great importance on filling the human “brain” with knowledge, but no one seems to care about filling the human “heart” with compassion. This is what the real role of religion is."

    - Dalai Lama

    இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு தோன்றும் சில எண்ணங்கள்

    அரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்
    ஞானம் ,அமைதியை கொடுக்கும்
    இந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்

    இதற்கு பெரிய தியாகம் செய்ய தேவை இல்லை,பாதிக்கபட்டவர்களை நாம் ஆதரவாக அரவணைத்தால் போதும்

    keeping in mind H H Dalai Lama's words, this article of yours has spread compassion into people's hearts.. atleast in Tamilmanam..Let us hope this light of compassion will flow beyond too...

    மங்கை

    ReplyDelete
  24. வணக்கம் மங்கை

    நல்ல சிந்தனைகளைத் தந்திருக்கிறீர்கள். இப்படியான சிந்தனைகளுக்கு வடிகாலாக தமிழ்மணம் இருப்பது குறித்துப் பெருமிதம் கொள்கின்றேன்.

    ReplyDelete
  25. நன்றி பிரபா

    மங்கை

    ReplyDelete
  26. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சில மனிதர்கள் தங்கி அல்லது தாக்கியிருப்பார்கள். உங்களுக்குள் மலரக்கா .... உங்கள் மூலமாக அவரை நாம் கண்டோம்.. எல்லாம் விதி. :-((

    ReplyDelete
  27. அரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்
    ஞானம் ,அமைதியை கொடுக்கும்
    இந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்

    அர்த்தமுள்ள வரிகள். அனுபவிக்கத் தந்நதமைக்காக நங்கையல்லா மங்கைக்கு நன்றிகள்.

    பிரபா!
    உருக்கமான இப்பதிவினை வாசிக்கும் போது, இசையமைப்பாளர் நம்மவர் மகேஸின் ஞாபகம் வந்தது. தன்னுடைய நோயின் முடிவு தெரிந்தபோதும், வாழும் காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்டவர்மகேஸ்.

    ReplyDelete
  28. படித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்,
    கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
    மலரக்காவின் ஆத்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  29. பிரபா, மறைந்த மலரக்கா குறித்த இந்த நினைவுப் பதிவு கண்ணீரை வரவழைத்தது. அவருடைய அந்தக் கடைசி நாட்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. குரலில் மட்டுமே அறிமுகமான முகமே தெரியாத அவரை உங்கள் இன்பத்தமிழ் ஒலி என்னைப்போல பல்லாயிரக்கணக்கான நேயர்களுக்கு அறிமுகப்படுத்தியது. வாரத்துக்கு இரண்டு தடவை என்றாலும் வானொலியில் தனது விருப்பமான பாடல்களைக் கேட்டு ஒலிபரப்பச் செய்வார்.
    அந்தக் கடைசி நாட்களை உங்கள் வானொலி மலரக்காவுக்குக் காணிக்கையாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
    இந்த நினைவுப் பதிவுக்கு மிகவும் நன்றி பிரபா.

    ReplyDelete
  30. வானொலி அறிவிப்பாளருக்கும் அவரது விசிறிகளுக்கும் இருக்கும் ஆழ்ந்த பந்தத்தை அருமையாக கொணர்ந்துள்ளீர்கள். தன் குடும்பம் முன்னேற தன்னை அழித்துக்கொண்ட மலரக்காவிற்கு உங்கள் பாடற்தொகுப்புக்கள் கொடுத்த ஆறுதலை எண்ணி நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

    ReplyDelete
  31. அதிகமாக நான் இங்கே வந்து வாசிப்பதில்லை. எப்போவாவது தமிழ்மணத்தில் இடை இடையே எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடும் எனக்கு தற்செயலாக இன்று உங்களது இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. கண்ணில் நீரையும், மனதில் பாரத்தையும் ஏற்றியதொரு பதிவு.

    ReplyDelete
  32. உங்கள் வருத்தம் என்னயும் பிரிந்த அந்த நிலைக்கு இட்டுசென்றது உண்மைதான். காலன்கள் உணர்வதில்லை மனித உணர்வுகளை.

    அன்புடன்
    தம்பி

    ReplyDelete
  33. மலர்ந்தும் மலராத மலராக இருந்த மலரைப் பலர் கண்டும் நீர் காணாத பொழுதில் கண்டது இப்படியா ஆக வேண்டும். அடடா! உறவு என்பது எப்படியெல்லாம் வருகிறது என்று பார்த்தீர்களா? யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? என்று கேட்கிறது அகநானூறு. காதலுக்கு மட்டுமல்ல நல்ல நட்புறவுகளுக்கும் இது பொருந்தும்.

    ReplyDelete
  34. Very moving. Hope you touch many more hearts by your programmes.

    ReplyDelete
  35. வணக்கம் ஷண்முகி

    வாசித்து உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  36. வணக்கம் தர்ஷன்

    தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்

    ReplyDelete
  37. வணக்கம் மலைநாடான்

    நம்பிக்கை ஒன்றுதானே நம் பெரிய பலம்

    ReplyDelete
  38. //உங்கள் நண்பன் said...
    படித்து முடித்ததும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. நல்ல நடையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்//

    வணக்கம் உங்கள் நண்பன், உங்களுக்கு அந்த உணர்வை ஏற்படுத்தியது குறித்து அறியத்தந்தமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  39. //Kanags said...
    பிரபா, மறைந்த மலரக்கா குறித்த இந்த நினைவுப் பதிவு கண்ணீரை வரவழைத்தது.//


    வணக்கம் சிறீ அண்ணா

    இங்கே உள்ள வலைப்பதிவாளர்களில் எனக்கும், உங்களுக்கும் மட்டுமே மலர் அக்காவின் அந்தக் கடைசி நாட்கள் ஒரு கண்முன் நடந்த அனுபவமாக இருந்தது, இல்லையா?

    ReplyDelete
  40. பிரபா,

    என்னப்பா இது. மனசைப் பிழிஞ்சுட்டாங்க நம்ம மலரக்கா.
    என்னத்தைச் சொல்றது? ஹூம்.....

    ReplyDelete
  41. //மணியன் said...
    தன் குடும்பம் முன்னேற தன்னை அழித்துக்கொண்ட மலரக்காவிற்கு உங்கள் பாடற்தொகுப்புக்கள் கொடுத்த ஆறுதலை எண்ணி நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான். //


    வணக்கம் மணியன்
    அந்த ஆறுதல் ஒன்றுதான் என்னை ஓரளவு சமாதானப்படுத்தி இன்னும் வைத்திருக்கிறது.

    ReplyDelete
  42. //கலை said...
    உங்களது இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. கண்ணில் நீரையும், மனதில் பாரத்தையும் ஏற்றியதொரு பதிவு. //
    வணக்கம் கலை
    வாசித்துத் தங்கள் உணர்வைத் தந்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  43. //தம்பி said...
    உங்கள் வருத்தம் என்னயும் பிரிந்த அந்த நிலைக்கு இட்டுசென்றது உண்மைதான். காலன்கள் உணர்வதில்லை மனித உணர்வுகளை.//

    வணக்கம் தம்பி
    தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  44. //G.Ragavan said...
    காதலுக்கு மட்டுமல்ல நல்ல நட்புறவுகளுக்கும் இது பொருந்தும். //

    வணக்கம் ராகவன்
    உங்கள் எடுகோள் மிகப்பொருத்தம்

    ReplyDelete
  45. //Boston Bala said...
    Very moving. Hope you touch many more hearts by your programmes.//

    வணக்கம் பொஸ்டன் பாலா
    என் வானொலி அனுபவங்கள் இன்னும் பல இருந்தாலும், இது மட்டும் இன்னும் ஆறாத ரணம்.

    ReplyDelete
  46. //துளசி கோபால் said...
    பிரபா,

    என்னப்பா இது. மனசைப் பிழிஞ்சுட்டாங்க நம்ம மலரக்கா.//

    துளசிம்மா,
    தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  47. படித்துக் கொண்டே வரும்பொழுது இது கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று என் மனம் வேண்டிக்கொண்டே வந்த நேரத்தில் யாவும் உண்மைச் சம்பவம் என்று தெரிந்ததும் மலரக்காவின் மரணத்திற்காக என் விழியில் என்னையும் அறியாமல் சில துளி கண்ணீர்க்கோடுகள்......

    ReplyDelete
  48. வணக்கம் சிவகுமார்
    தங்கள் உணர்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  49. கண்ணீர் நீர் வழிந்ததே
    எனை அறியாமல்...........

    ReplyDelete
  50. வணக்கம் அஜீவன்
    வாசித்துத் தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  51. மெளனமாய் அழவைத்த பதிவு.. உங்கள் மனதில், மலரக்காவின் மறைவினால் ஏற்பட்ட பாதிப்பு.. எங்கள் மனதிலும்...

    மங்கை அவர்களின் பின்னூட்டம் அருமை..
    யோசிக்கவும் வைத்துள்ளார்..
    நீங்கள் சொன்னது போல் நல்ல சிந்தனைகளை கொடுத்துள்ளார்.. அவர் செய்து வரும் சேவைக்கு நாம் நம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்

    இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

    Suresh

    ReplyDelete
  52. //இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

    Suresh //

    மிகவும் நன்றிகள் சுரேஷ்

    ReplyDelete
  53. பிரபா

    இந்த பதிவுக்கு வந்து இருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. மனித நேயம் இன்னும் செத்து விடவில்லை .. தட்டி எழுப்பினால் போதும்...


    this is the need of hour...

    மலைநாடன்,சுரேஷ் அவர்களுக்கு நன்றி

    வாய்ப்பு கொடுத்த பிரபாவுக்கும் நன்றி

    மங்கை

    ReplyDelete
  54. //மங்கை said...
    மனித நேயம் இன்னும் செத்து விடவில்லை .. தட்டி எழுப்பினால் போதும்...//


    வணக்கம் மங்கை
    நீங்கள் சொல்வது மிகவும் உண்மை

    ReplyDelete
  55. hi
    its aravin frm singapore really u miss malarakaa.wen i read th blog i feel the happenings there .u r naration is realistic thank u

    ReplyDelete
  56. hi i feel it.u r narration is nice
    REALLY VERY TOUCHING

    ReplyDelete
  57. HI I CANT TYPE STILL IM IN TEARS .WHAT A HUMAN .MANASU VALIKUTHU PAA .U R NARATION IS ALSO NICE

    ReplyDelete
  58. மலரக்காவின் கதையைப் படித்து ஒரு நிமிடம் மனதில் ஏதோ வேதனை.

    உங்களுக்கு எழுதும் பொழுது இன்னும் வேதனை அதிகமாகத்தான் இருந்திருக்கும்.

    தினமும் வரும் அந்த நினைவே அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலி

    ReplyDelete
  59. வணக்கம் அரவின்
    வாசித்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தியமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  60. //மஞ்சூர் ராசா said...

    தினமும் வரும் அந்த நினைவே அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலி //
    உண்மை மஞ்சூர் ராஜா

    ReplyDelete
  61. Thank you for remembering Malar aunty so fondly. It means so much to me.

    I have had the honour, privilege and great good fortune of enjoying Malar aunty's company and wisdom. All that she has taught us during her time…especially during the last months she has been ill…her courage and patience is beyond anyone and she really taught me that believing in God, having a strong will and a positive attitude is the way to go through life and in her case even painful, terminal cancer.I will never forget the months throughout her illness that she stayed with me at my house and we shared a room, many laughs and silent tears together.
    I love Malar aunty she was a person who liked the simpler, purer pleasures in life. I think about her school gal like charm and the many hours her and I spent together talking about her love for the movies, music and clothes. Those really were fun times. She always knew what the latest Tamil movie or song was …she had a special place in her heart for 'Inba Tamil Oli'. I loved her youthfulness. I shall surely remember those fun times always.

    One of the great lessons I learned during the long months of Malar auntys illness is how desperately she, her incredible support system of friends and family grew to need and rely on each other. Malar auntys circle of friends became strength and joy for her. And she gave a great gift to all of those who participated in it, a common bond of love shared only by them that will never be broken.

    Thank you for letting her live in your memory. That is all she ever hoped for in us.

    ReplyDelete
  62. வணக்கம் துர்க்கா
    நீங்களும், உங்கள் அம்மா நகுலாக்காவும் மலரக்காவின் இறுதிக்காலத்தில் செய்த உதவியையும், பயன்கருதா நட்பையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின்றேன். நீங்கள் செய்த பணி பல ஆண்டுகள் செய்த புண்ணியத்துக்கு ஒப்பானது. கடவுளின் கிருபை என்றும் உங்களுக்கு உண்டு.

    ReplyDelete
  63. நெஞ்சை தொட்ட சம்பவம், மனது அழுத்தமாகிறது படித்தவுடன் சில சமயம்.

    ReplyDelete
  64. கருத்துக்கு நன்றிகள் ரவி

    ReplyDelete
  65. கணமானது நெஞ்சம்....
    கண்களில் நீர் துளியினை கட்டுபடுத்த இயலவில்லை..........

    அழகான எழுத்து நடையில் மலரக்காவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் பிரபா!!

    [ முதன் முறையாக உங்க தளத்திற்கு வந்து, மனம் நெகிழ்ந்து போனேன்]

    ReplyDelete
  66. வணக்கம் திவ்யா

    காலம் கடந்து இப்பதிவை வாசித்தாலும், உடன் உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  67. வாங்க நண்பா

    இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது போல் இருக்கின்றது :(

    ReplyDelete