Pages

Wednesday, January 25, 2006

ஃபீனிக்ஸ் தேசத்தில் நான்



அணுகுண்டுஅழிவிலிருந்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்த ஜப்பானிய தேசத்திற்கு எனது வேலை செய்யும் நிறுவனம் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு கடந்த மூண்டு வருஷத்துக்கு முன்னால போயிருந்தன். என்ர டயரியின் பதிவிலிருந்து இதுவரை அச்சேறாத அந்தப் பேனாப் பதிவு இதோ.

சிட்னியிலிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு எட்டரை மணித்தியாலப் பயணம் அது. ஜப்பானின் சர்வதேச விமானத் தளம் நரிற்றா (Narita) என்று அழைக்கப்படுகின்றது. பிளேனில இருந்து இறங்கியதும் முதல் வேலையாகப் பணமாற்று அலுவலகம் சென்றேன். பொதுவாகக் கீழைத்தேய நாடுகளுக்குச் செல்லும் போது ஒரு சில
அவுஸ்திரேலிய நோட்டுக்களை மாற்றினால்போதும் கைகொள்ளாத அளவிற்கு அந்நாட்டுக் கரன்சி கிடைக்கும். இந்த அனுபவம் முந்தி என்ர சீனப் பயணத்தில் ஏற்பட்டது. இதனால ஒரு 50 அவுஸ்திரேலிய டொலரை மாற்றினால் போதும் என்று நினைத்து நோட்டை நீட்டினேன். 3000 ஜப்பானியஜென் கிடைச்சுது. அப்பாடா ஒரு கிழமைக்கு இது தாங்கும் எண்டு நினைச்சுக்கொண்டு விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குப் போகும் சொகுசுப் போரூந்தைப் பிடித்தேன். என் நினைப்பில் மண். பஸ் டிக்கற் விலை 3,000 ஜென் என்றார் பஸ் நடத்துனர். Taxi என்றால் 20,000 ஜென்னாம். நடந்தே போகலாம் என்றால் பஸ் பயணமே ஒண்டரை மணி நேரம்.

ஜப்பானில் நான் போன வேளை இதமான காலநிலை எண்டாலும் ஒருவிதப் புழுக்கம் நிலவியது. சாலைப் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்காகவே செய்யப்பட்டது போல Taxi
க்காகப் பிரத்தியோக வடிவமைப்பில் கார்கள் இருந்தன. Taxi சாரதிமார் கோர்ட் சூட் அணிந்திருந்தார்கள். ஹோட்டலில் என் அறையில் நுழையும் வரை வாறபோற சிப்பந்திகள் தலையைக் கீழேசாய்த்து அவர்கள் பாணியில் வணக்கம் சொல்லிக்கொண்டே போனார்கள். நாம் சம்பிரதாயபூர்வமாகக் கைகூப்பி வணக்கம் செலுத்துவது போல ஜப்பானியருடைய வழக்கப்படி ஏறக்குறைய 45% தம் உடம்பை வளைத்துச் சிரம் தாழ்த்துவது அவர்களின் மரியாதை முறை. எங்களுக்கு அந்தமுறை தெரியாவிட்டால் முயற்சி செய்தும் பார்க்கக் கூடாதாம், தவறான நம் செயல்முறை சந்திக்கும் ஜப்பானியரை அவமதிப்பது போல என்றார்கள்.

ஹோட்டல் அறையில் பைபிளின் புதிய ஏற்பாடு ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புக்கள் இருந்தன. களைபாறிக்கொண்டே தொலைக்காட்சிப் பொட்டியை முடுக்கினேன். BBC, CCN தவிர அனைத்தும் ஜப்பானியச் சனல்கள் ஆனால் ஒன்றில் கூடக் குலுக்கல் நடனங்களோ அல்லது சினிமா நடிகர் நடிகையரின் அரிய பெரிய(?) பறைசாற்றல்களைக் காணோம். அறிவியல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளே நிரம்பியிருந்தன. ஜப்பானிய ஹோட்டல்களில் டிப்ஸ் வழங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அப்படியே வழங்கினாலும் அது கொடுக்கப்படுவரை அவமானப்படுத்துவது போலவாம்.

ஜப்பானியருடைய எழுத்து முறை சித்திரவடிவில் அமைந்தது. ஒவ்வொரு ஜப்பானிய எழுத்தையும் நுணுக்கமாகப் பார்த்தால் அது சொல்லவந்த செய்தியின் படவடிவில் தான் இருக்கும். உதாரணமாக மரம் என்பதற்கு மரவடிவில் ஒரு எழுத்து இருக்கும்.

இவர்களுடைய மொழியில் மூன்று விதமான உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
Hiragana என்பது ஜப்பானியப் பூர்வீக எழுத்து வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும் உதாரணம்:





Kanji என்பது சீனமொழிக்கலப்பு எழுத்துக்களாக புழக்கத்தில் 45 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:



Katakana என்பது மற்றைய பிறமொழிக் கலப்பு வடிவங்களாக 46 எழுத்துக்களைக் கொண்டும்
உதாரணம்:



உள்ளன. இவற்றில் Kanji என்பது மிகவும் சிக்கலான சொற்சேர்க்கை தாங்கியது. இது 1200 வருடங்களுக்கு முன்பு பெளத்தகுருமாரால் கொண்டுவரப்பட்டது.

டோக்கியோ நகரைவிட்டு சிட்னி திரும்பும்வரை என்னால் காணமுடியாததாக இருந்தவை குப்பைத் தொட்டிகள். வீதிகளின் நடைபாதைகளில் இந்தக் குப்பைத்தொட்டிகளைக் காணமுடியாதிருந்தது. ஆனாலும் சுற்றுச்சூழல் மிகவும் சுத்தமாக இருந்தது. ஜப்பானியர்கள் தாம் வழிநெடுகில் உபயோகித்துத் தீர்ந்த குப்பைகளின் இருப்பிடமாகத் தம் காற்சட்டைப் பைகளை உபயோக்கிறார்களோ என்னவோ...
நான் அவதானித்திருந்த இன்னொரு விடையம் குடைகள். குடைகளுக்கான பாதுகாப்புப் பெட்டகங்கள் (Lockers) எல்லாக் கடைத்தொகுதி மற்றும் முக்கிய நிலையங்களில் உள்ளன. கர்ணனுடைய கவசகுண்டலம் போல்ச் சராசரியாக எல்லா ஜப்பனியரும் குடையுடன் திரிகிறார்கள்.

நான் தங்கியிருந்த நகரத்தில் ஒரு மாலைப்பொழுது உலாவியபோது என்ற The Taj எழுத்து கண்ணில் பட்டது. நான்கு நாட்களாக ஜப்பானிய மற்றும் சீன உணவைச் சாப்பிட்டுச் சலித்துப் போன எனக்கு இந்த உணவகத்தைக் கண்டபோது பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. இந்த உணவகத்தில் இந்தியச் சமையலாளியின் கைவண்ணத்தில் நல்ல இந்திய உணவுகள் கிடைக்கின்றன. இந்தியர்கள் பலரையும் கண்டேன்.

ஒருநாள் மாலை எமது ஜப்பானியக் கம்பனியில் வேலைபார்க்கும் ஜப்பானியருடன் Akihabara (Japan's Electronic Shopping Capitol) என்ற இடத்திற்குச் சென்றேன். இந்த இடம் தான் ஜப்பானில் இலத்திரனியல் மற்றும் மின்சாரச் சாதனங்கள் அதிகம் விற்கும் இடம். Duty free shop ஒரு இல் சீக்கிய இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் விற்பனையாளராக இருந்தான். வழிநெடுகில் உள்ள கடையெங்கும் விதவிதமான புதுப்புதுச் சாதனங்கள் வாரியிறைந்திருந்தன. அவுஸ்திரேலியச்சந்தையில் தற்போது இருக்கும் நவீன உபகரணங்கள் பல ஜப்பான் சந்தையில் வழக்கொழிந்து போயிருந்தன. இருப்பினும் இந்தக்கடைகளில் வெளிநாட்டவர் பொருள் வாங்கும் போது உள்ள சிக்கல்கள் இரண்டு.
1. மிக மலிவாக இருக்கும் பொருட்கள் ஜப்பானின் நுகற் பாவனைக்கு ஏற்றவிதத்தில் மட்டுமே உள்ளன. அவற்றிற்குச் சர்வதேசப் பாவனை உத்தரவாதமும் கிடையாது.

2. சர்வதேசத்தரத்திலும் பாவனைக்கேற்றவிதத்திலும் உள்ளபொருட்களின் விலை பன்மடங்கு அதிகம்.

ஜப்பானியர்கள் பூனையைத் தங்கள் அதிஷ்டத்திற்குரிய பிராணியாகக் கருதுகிறார்கள். வெள்ளைப் பூனைச்சிலை தங்களின் வியாபாரத்தைப் பெருக்கும் என்று கருதும் அதேவேளை
தங்கநிறப்பூனைச்சிலை நிறைந்த செல்வத்தையும் வெள்ளி நிறப்பூனை கல்வியைப் பெருக்கும் என்றும் கொண்டு அவற்றை வைத்திருக்கிறார்கள்.

தம்கடைகளின் வெளியே உப்பு நிறந்தசட்டிகளை வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் துர்தேவதைகள்
அவர்களை அண்டாது என்றும் நம்புகிறார்கள்.
என்னுடன் பயணத்தில் உடன்வந்த சீன நண்பர் மூலம் சீனர்களின் நம்பிக்கை இரண்டை அறியக்கூடியதாக இருந்தது.
1. சீனர்கள் ஒருவரின் பிறந்தநாளின் போது கடிகாரத்தை வழங்குவது கிடையாது.
அப்படி வழங்குவது பிறந்தநாள் கொண்டாடுபவரை நரகலோகத்திற்கு அனுப்புவதற்கான ஆசிவழங்குவது போலவாம்.

2. ஏதாவது சுபகாரியம் சம்பந்தமான விடையங்களை சிவப்புமைப் பேனாவால் எழுதமாட்டார்களாம்.

ஒருமுறை ஜப்பானில் வெளிவரும் ஆங்கில நாளிதழைப் பார்த்தபோது ஈழத்தின் வன்னிக்குச் சென்று
வந்த ஜப்பானிய நிருபர் ஒருவர் தன் அனுபவத்தை எழுதி இருந்தார்.
முதல் பந்தியிலேயே வன்னியில் இன்னொரு அரசாங்கம் சுயமாக இயங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்
நான் புறப்படும் தினம் Asakusa என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். நகரவாழ்க்கையிலிருந்து சற்று விலகிய இடமாக அது இருந்தாலும் நகரத்தின் பாதிப்புக்களும் சில இருந்தன. குதிரையில் பணம் கட்டிவிளையாடும் அன்பர்களுக்கான சூதாட்ட விடுதிகளும் அங்கிருந்தன. ஜப்பானிலிருந்து ஞாபகமாக ஏதாவது வாங்கி வரவேண்டும் என்றால் இந்த இடத்திற்குத்தான் வரவேண்டும் , அவ்வளவிற்கு அதிகமான ஜப்பானியக் கலைப்பொருட்களின் கடைகள் அங்கிருந்தன.















Asakusa வில் Temple of Kume என்ற ஆலயம் உள்ளது. பண்டைய காலத்திலே Heinai என்ற ஆட்சியாளன் மக்களை மிகவும் துன்புறுத்தி நாட்டை ஆண்டு வந்தானாம். பின்னர் ஒரு காலகட்டத்தில் அவன் மனம் திருந்தி இந்த ஆலயத்தில் தஞ்சம் புகுந்தானாம்.
அன்றிலிருந்து இந்த இடத்திற்கு வருபவர்களுக்கு நல்வாழ்க்கைக்கானஆசீர்வாதம் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆலய முன்றலில் 100 ஜப்பானிய ஜென்னைச்
செலுத்தினால் தகரப்பேணியில் உள்ள குச்சிகளில் ஒன்றைஎடுக்கலாம்.
அருகில் இருக்கும் தபால் பெட்டிகளில் அந்தக் குச்சியில் உள்ள இலக்கத்தை ஒத்த இலக்கமுள்ள இலக்கம் பொருத்தப்பட்ட பெட்டியைத் திறந்தால் சுருட்டப்பட்ட காகிதம் இருக்கும்.

அக்காகிதத்தில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிலவாசகங்கள் உள்ளன. அவை இந்தத் துண்டை எடுத்த நபரின் எதிர்காலம் பற்றிய குறிப்புக்களாக உள்ளன. இந்த நபரின் குறிப்பிட்ட எதிர்காலம் சரியில்லை எனும் பட்சத்தில் அருகில் உள்ள கம்பிவலையில் அந்தத்துண்டைக்கட்டி வழிபடவேண்டும்.
இந்த ஆலயத்தின் உட்புறம் பெரிய உண்டியல்
அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில் காசை எறிந்து வழிபடவேண்டும். அந்த ஆலயத்தின் உள் எந்தவொரு விக்கிரமும்
இல்லையென்றாலும் ஆலயச்சுற்றாடலில் சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.
இந்த மார்ச் 1945, 2ஆம் உலகப்போரின் போது அழிக்கப்பட்டதாம்.
பின்னர் 1978 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் 1350 ஆவது ஆண்டு நிறைவின்போது சுற்றுலாத்துறையினால் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது.


நான் சென்றவேளை ஜப்பான் பாரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்திருந்தது.
வேலையில்லாதோர் படை 6% வீதத்தைத் தொட்டிருந்தது. இருப்பினும் ஜப்பானியர்களின் கடின உழைப்பின் முன் எவரும் நிற்கமுடியாது. காலையில் வேலைக்கு வரும் பலர் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் கதிரையைவிட்டு எழும்புவார்கள்.
அவுஸ்திரேலியா, சிட்னியில் 5.30 மணியுடன் பெரும் கடைத்தொகுதிகள் இழுத்து மூடப்பட்டுவிடும். ஆனால் டோக்கியோவில் 9 மணிக்கு மேல் கடைத்தொகுதிகள் திறந்திருப்பது சர்வசாதாரணம்.

சிட்னி திரும்பியதும் ஊருக்குப் போன் எடுத்தேன்.
மறுமுனையில் அப்பா.
" அப்பா! ஜப்பான்காரன்கள் ஓய்வொழிச்சல் இல்லாம நல்லா வேலை செய்வான்கள்"
இது நான்.

" ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்"
இது என்ர அப்பா.





27 comments:

  1. அருமையான பதிவு, ஏதோ ஜப்பானுக்கே சென்றுவந்தது போல ஒரு அனுபவம்.

    ReplyDelete
  2. அருமையான பயணக் கட்டுரை
    தமிழ்மணத்தில் இத்தகைய பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெறாதது துரதிர்ஷ்டமே.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    அந்த ஜப்பானிய பெண்குழந்தை மிக அழகு. நீங்களே எடுத்ததாயின் நிலாச்சாரலில் உபயோகித்துக் கொள்ள அனுமதி தருவீர்களா? படம் ஒரிஜினல் அளவில் இருந்தால் நன்றாக இருக்கும். விருப்பமிருப்பின் என் முகவரிக்கு அனுப்புவீர்களா? (nila at nilacharal dot com)


    பி.கு: பின்னூட்டம் எழுதுவதற்குள் உங்கள் பதிவு முகப்பிலிருந்து காணாமல் போய்விட்டது. தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று :-(

    ReplyDelete
  3. நல்ல பயணக் கட்டுரை. வித்தியாசமான நடை. உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஊருடன் தொடர்பு படுத்தி முடிக்கும் உங்கள் பாணியே தனிதான்.
    //தமிழ்மணத்தில் இத்தகைய பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெறாதது துரதிர்ஷ்டமே// என்பது என்னுடைய அபிப்பிராயமும் கூட.

    ReplyDelete
  4. நல்ல பயணக் கட்டுரை.
    தொடர்ந்து இப்படியானவற்றை எழுதவும். படங்கள் அதிகம் சேர்த்திருக்கலாம். ஒரே பதிவில் எழுதாமல் நாலைந்து பதிவில் சற்று விரித்து எழுதியிருக்கலாம்.

    நீங்கள் இறுதிப்பத்தியில் உங்கள் அப்பாவின் உழைப்புப் பற்றிக் கூறினீர்கள். இது அந்தக்காலத்திற்கு மட்டுமில்லை. இப்போதும் அப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன். வன்னியில் இதேபோல் அதிகாலையில் வயலுக்குப்போய் வந்து... பள்ளிக்கூடம்போய் வந்து.. பிறகு திரும்பவும் வயலுக்குப்போய்... எண்டு நிறைய இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. உங்கள் பயணக் கட்டுரை, மிகவும் நல்லாக உள்ளது. தொடர்ந்து இங்ஙனம் நயம் பட எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பிரபா, அருமையான கட்டுரை.

    ஜப்பானைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள முடிந்தது, இது போன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகள் அனைவரும் படிப்பது இல்லை என்பது உண்மை தான்.

    நீங்க உங்க பங்களிப்பை தொடர்ந்து செய்யுங்க. என் வாழ்த்துகள்.

    அன்புடன்
    பரஞ்சோதி

    ReplyDelete
  7. தங்கள் பின்னூட்டம் இட்ட இலா, நிலா, சிறீ அண்ணா, வசந்தன், வாழ்த்தி, பரஞ்சோதி உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உண்மையிலேயே தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு ஒரு உற்சாகத்தையும் எழுதவேண்டும் என்ற அவாவையும் இன்னும் ஏற்படுத்துகின்றது.

    நிலா,
    தாங்கள் கேட்ட படம் மற்றும் அனைத்துப் படங்களுமே ஜப்பானிய சுற்றுலாத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை. கட்டுரை மட்டுமே என் சொந்தப் படைப்பு.

    வசந்தன்
    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. எனது அப்பாவின் கருத்தை நான் இந்தக் கட்டுரையில் இணைத்ததற்குக் காரணம், நம்மவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்காகவே.

    என்னுடைய இந்தப்பயணம் குறுகியகாலம் என்பதால் இவ்வளவு அனுபவங்களைத் தான் திரட்டமுடிந்தது. என் பயணம் மூண்டுவருசத்துக்கு முந்தியதால் காலத்திற்கு ஒவ்வாத சில பதிவுகளை நான் விட்டுவிட்டேன்.

    ReplyDelete
  8. உங்களுடைய பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது. இதனால் உந்தப்பட்டு நான் எழுதிய பதிவு இங்கே.

    ReplyDelete
  9. நல்ல பதிவு. இப்போதுதான் பார்த்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  10. நன்றி செல்வராஜ் மற்றும் நரேன்

    செல்வராஜ் தங்கள் பதிவைப் பார்த்தேன். தங்களின் ஜப்பானிய மற்றும் கொரிய அனுபவங்கள் அருமை.

    ReplyDelete
  11. அருமையான கட்டுரை/பதிவு. நன்றி பிரபா! கட்டுரையைப் படித்தபின், 5 வருடங்களுக்கு முன் நான் ஜப்பான் சென்ற போது நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  12. நன்றி உமாமகேஸ்வரன்,

    தங்களுக்கான தனிப்பட்ட புளொக் இருந்தால் அறியத்தரவும்.

    ReplyDelete
  13. பிரபா, இன்னும் தனிப்பட்ட புளொக் எழுத ஆரம்பிக்கவில்லை.

    ReplyDelete
  14. good what a fentastic view & explanation. i saw today. you continue your style. i am also a fan of your website. gohead god will help you.

    ReplyDelete
  15. வருகை தந்து உங்கள் கருத்தளித்த அநாமோதய நண்பருக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  16. நன்றிகள்...கானபிரபா..... நல்லதொரு பதிவு ...இப்பொழுது தான் பார்த்தன்.....எங்கள் தரவளி ஜப்பானுக்கு போக எங்கை சான்ஸ் கிடைக்க போகுது.........இலவசமாக இந்த பதிவும் மூலம் கூட்டிப்போனதுக்கு நன்றி...

    ReplyDelete
  17. வணக்கம் சின்னக்குட்டி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
    இவ்வளவு நாளா இந்தப்பதிவு உங்கட கண்ணில ஆப்பிடாமப் போட்டுது :-)

    ReplyDelete
  18. எப்படி இருக்கீங்க பிரபா? அந்த சீடிய எழுதி ஒங்க கிட்ட குடுக்க முடியாமப் போயிருச்சே....சரி. விடுங்க.

    ஜப்பான் பற்றி நிறைய சொல்லீருக்கீங்க. அங்க இருக்குற துப்புறவும் தூய்மையும் உழைப்பும் உண்மையிலேயே பிரமிப்புதான்.

    ReplyDelete
  19. என்ன அழகான ஒரு பதிவு...இருமுறை படித்து இன்புற்றேன்..

    ReplyDelete
  20. " ஏன் நாங்கள் மட்டும் என்ன குறைச்சலே தம்பி? நான் வெள்ளன மூண்டு நாலு மணிக்கு எங்கட தோட்டத்துக்குக் தண்ணி இறைக்கப் போவன், பிறகு எட்டுமணிக்குப் பள்ளிக்கூடம் போய் வாத்தியார் வேலை, பின்னேரம் திரும்பவும் தோட்டவேலை, ஆடுகளுக்கு குழைவெட்ட வேணும்"
    இது என்ர அப்பா.

    அப்பாவின் கூற்று மிகவும் சரிதான். ஜப்பானியருடன் பணிபுரிபவன் என்ற முறையில் சொல்கிறேன்,அவர்களது திறமைக்கு தமிழர்கள் சிறிதும் குறைந்தவர்கள் இல்லை.இது அவர்களே ஒத்துக்கொண்டு கூறியது.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  21. வணக்கம் ராகவன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், நான் நலமாக இருக்கின்றேன், இன்னும் இரண்டு வாரத்தில் பெங்களூரில் சந்திப்போம்:-)

    ReplyDelete
  22. வணக்கம் செந்தழல் ரவி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் இன்னும் என்னை எழுதத்தூண்டுகின்றது.

    ReplyDelete
  23. நீங்கள் கூறியது மிகவும் உண்மை துபாய் ராஜா
    பல சந்தர்ப்பங்களில் எம்திறமை மீது எமக்கே சந்தேகம் ஏற்படுகின்றது.

    ReplyDelete
  24. //ஜப்பானியர்கள் தாம் வழிநெடுகில் உபயோகித்துத் தீர்ந்த குப்பைகளின் இருப்பிடமாகத் தம் காற்சட்டைப் பைகளை உபயோக்கிறார்களோ என்னவோ...//

    பிரான்சில் கால்ப்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி நடந்தபோது, மைதானத்தில் ஜப்பானியர்கள் இருந்த இடம் மட்டும் எந்தவித குப்பையுமில்லாமல் இருந்ததாம். தங்கள் நாட்டில் மட்டுமல்ல, போகுமிடங்களிலும், அவர்களின் தூய்மை போற்றத்தக்கது.

    அது சரி இவ்வளவு நாளும், இந்தப் பதிவு எப்படி கண்ணில் படாமல் போனது?

    ReplyDelete
  25. வணக்கம் மலைநாடான், லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கிறீர்கள்:-)

    ReplyDelete
  26. "நீங்கள் கூறியது மிகவும் உண்மை துபாய் ராஜா பல சந்தர்ப்பங்களில் எம்திறமை மீது எமக்கே சந்தேகம் ஏற்படுகின்றது."

    பிரபா!!சந்தேகம் என்று தாங்கள் கூறி இருப்பது நம்(தமிழர்களின்)அதீதமான தனித்திறமை குறித்த பாராட்டுதானே!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  27. /பிரபா!!சந்தேகம் என்று தாங்கள் கூறி இருப்பது நம்(தமிழர்களின்)அதீதமான தனித்திறமை குறித்த பாராட்டுதானே!./

    உண்மை:-)

    ReplyDelete